மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தென் திருப்பதி என போற்றப்படும் அழகர்கோவிலில் நடைபெறும் புகழ்பெற்ற ஆடிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்று காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை மங்கள இசை முழங்க, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை ஜூலை 22 காலை தங்கப் பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும். ஜூலை 23-ஆம் தேதி இரவு அனுமன் வாகனத்திலும், 24-ஆம் தேதி கருட வாகனத்திலும், 25-ஆம் தேதி காலை சுந்தரராஜ பெருமாள் சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு சேஷ வாகன புறப்பாடும் நடைபெறும். ஜூலை 26-ஆம் தேதி இரவு மோகினி அவதார அலங்காரத்திலும், பின்னர் யானை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும். ஜூலை 27-ஆம் தேதி புஷ்ப சப்பரத்திலும், 28-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூலை 29-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. காலை 7.05 மணி முதல் 7.25 மணி வரை தேரின் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு புஷ்பப் பல்லக்கு புறப்பாடும் நடைபெறும். அன்றைய மாலை, அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு திருக்கதவுகள் திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் சிறப்பு படி பூஜை, தீபாராதனை மற்றும் சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூலை 30-ஆம் தேதி தீர்த்தவாரியும், ஜூலை 31-ஆம் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகின்றன. மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி கருட வாகனத்தில் சிறப்பு புறப்பாடு நடைபெறுவதுடன் இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருந்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.