பூரி, ஒடிசா: வருடாந்திர ரத யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபெறும் ஹேரா பஞ்சமி நிகழ்வில் குண்டிச்சா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
ஒடிசாவில் உலகப் புகழ் பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில், ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரை ஆகிய மூன்று கடவுள்களின் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ரதங்கள், பிரதான கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அவா்களின் பிறப்பிடமாக கருதப்படும் குண்டிச்சா கோயில் சென்றடைந்தனர். வருடாந்திர ரத யாத்திரையின் ஐந்தாம் நாளான இன்று, புனிதமான ஹேரா பஞ்சமி சடங்கைக் காண்பதற்காகப் பூரியில் உள்ள குண்டிச்சா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அன்னை மகாலட்சுமி சன்னதியிலிருந்து ஸ்ரீ குண்டிச்சா கோவிலை நோக்கி விஜய ஊர்வலம் செல்லும் சிறப்பான காட்சியும், நந்திகோஷ் தேருக்கு அருகே நீதி வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்றது. இந்தச் சடங்கு, ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பஹுடா யாத்திரைக்கான (திரும்பும் யாத்திரை) ஆயத்தப் பணிகளின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த பாரம்பரிய நிகழ்வு, ரத யாத்திரை கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், ஒடிசாவின் செழுமையான ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.