|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> பயநோய் போக்கும் பஞ்சாக்கரப் பதிகம்
|
|
பயநோய் போக்கும் பஞ்சாக்கரப் பதிகம்
|
|
மனதில் இனம்புரியாத பயம் தோன்றும்போதெல்லாம், நமசிவாய மந்திரத்தைச் சொல்லும்படி சொல்வார்கள் பெரியவர்கள். அந்த ஐந்து எழுத்து மந்திரத்திற்கு மனதை செம்மைப்படுத்தி, அதில் உள்ள அழுத்தங்களைப் போக்கி, நிம்மதியை நிலைக்கச் செய்யும் ஆற்றல் உண்டு, மனம் அமைதியாக இருந்தாலே ரத்த அழுத்த மாற்றம் போன்ற பிணிகள் வராது என்கிறது இன்றைய மருத்துவம். மனதில் நிம்மதி நிறைந்திடவும், தேவையற்ற கவலைகள் நீங்கவும், ரத்த அழுத்தம் சீராக இருக்க திருஐந்தெழுத்தான நமசிவாய மந்திரத்தினைப் போற்றி ஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தினைப் பாடுவது சிறந்த பலன்தரும் என்பர். உயர்வான அந்தப் பஞ்சாக்கரப் பதிகம்.
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உடைத்தன, அஞ்சு எழுத்துமே.
மந்திர நால்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து ஏனை வழி திறந்து, ஏத்து வார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர் செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன் அஞ்சு எழுத்துமே.
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்து அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்; தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும், அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர் பீடை கெடுப்பன; பின்னை, நாள் தொறும் மாடு கொடுப்பன; மன்னு மா நடம் ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின; பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச் சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும், பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின; வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
நற்றமிழ் ஞானசம்பந்தன் நால்மறை கற்றவன், காழியர் மன்னன் உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
|
|
|
|
|