SS திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை

(1) என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுகமழ் சோலைவியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்திமுகத் தான்.
 
(2) முகத்தாற் கரியனென் றாலுந் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்துஎம் மான்
உகந்தா னவன்றன் உடலம் பிளந்த ஒரு கொம்பனே.

(3) கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலஞ் செய்துகொளுந் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலஞ் செய்வதென்னோ பேசு.

(4) பேசத் தகாதன பேயெருதும் பெருச் சாளியும்என்
றேசத் தகும்படி யேறுவதே இமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத்
தேசத் தவர்தொழு நாரைப் பதியுட் சிவக்களிறே.

(5) களிறு முகத்தவனாய்க் காயஞ்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரையூர் ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்னாரை யூரான் மகன்.

(6) மகத்தினின் வானவர் பற்கண் சிரந்தோள் நெரித்தருளுஞ்
சுகத்தினி னீள்பொழில் நாரைப் பதியுட் சுரன் மகற்கு
முகத்தது கை அந்தக் கையதுமூக் கந்த மூக்கதனின்
அகத்துவாய் அந்த வாயது போலும் அடுமருப்பே.

(7) மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றுத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணு கின்ற எறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.

(8) மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் றன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களிறேயுனை வாழ்த்துவனே.

(9) வனஞ்சாய வல்வினை நோய் நீக்கி வனசத்
தனஞ்சா யலைதருவா னன்றே - யினஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்டோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மகனாம்.

(10) நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்
தேரண வுந்திரு நாரையூர் மன்னு சிவன் மகனே
காரண னே எம் கணபதியே நற்கரிவதனா
ஆரண நுண்பொருளே என்பவர்க்கில்லை அல்லல்களே.

(11) அல்லல் களைந்தான்ற ன்அம்பொனுலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களைச்
செங்கழுநீர் கட்குந் திருநாரை யூர்ச்சிவன் செய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

(12) கோவிற் கொடிய நமன்றமர் கூடா வகைவிடுவன்
காவிற் றிகழ்திரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின் முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே

(13) யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்த பொழில் நாரையூர்ச் சூலம்வல னேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.

(14) ஏறிய சீர்வீர ணக்குடி ஏந்திழைக் கும்மிருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத் தினுக்கிளை யானை விண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் வித்தகனே.

(15) கனமதில் சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

(16) வானிற் பிறந்த மதிதவழும் பொழின் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழுங்
கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் றுரைப்பரிவ் வையகத்தே.

(17) வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழித்து -கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தையமர் வான்.

(18) அமரா! அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த
குமரா! குமரற்கு முன்னவனே கொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் றன்னுழைத் தோன்றினனே என நின்று
அமரா மனத்தவர் ஆழ்நர கத்திலழுந்துவரே.

(19) அவமதியாதுள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாங்
கொம்பன் விநாயகன், கொங் கார் பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன் சீர் நாம்.

(20) நாந்தன மாமனம் ஏத்துகண் டாய் என்று நாண்மலரால்
தாந்தன மாக இருந்தவண் நாரைப் பதிதனுள்ளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னே என்னை யாண்டவ னேஎனக் கென்னையனே.

(நம்பியாண்டார் நம்பிகள் அருளியது)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar