புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழா கோலாகலம்: 30 யானைகளில் வண்ண குடை மாற்றம்



பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று வண்ணக் குடை மாற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.

கேரள மாநிலத்தில் புகழ் பெற்றது திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பூரம் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில், 70-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் பங்கேற்றன. வடக்குநாதரை வணங்கி நெய்தலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி, தெற்கு கோபுர நடை திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், நேற்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோவில் உற்சவர் எழுந்தருளி ஏழு யானைகளின் அணிவகுப்புடன் தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து வடக்குநாதரை வணங்கி மேற்கு கோபுர நடை வழியாக வெளியில் வந்தார். இதேபோல், விழா கொண்டாடும் உப கோவில்களான, லாலுார் பகவதி அம்மன் கோவில், அய்யந்தோள் ஸ்ரீகிருஷ்ணர் கோவில், நெய்தலைக்காவு பகவதி அம்மன், செம்பூக்காவு பகவதி அம்மன், பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோவில், சூரக்கோட்டுக்காவு பகவதி அம்மன், காரமொக்கு பகவதி அம்மன், கணிமங்கலம் சாஸ்தா உற்சவர்களும் யானைகள் மீது எழுந்தருளி வடக்குநாதரை வணங்கினர்.

இதில், ஆசியாவின் மிக உயரமான தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் என்ற யானை மீது, நெய்தலைக்காவு பகவதி அம்மன் எழுந்தருளினார். அதன்பின், வடக்குநாதர் சன்னிதியை அடைந்து, பிரஹ்மசுவம் மடத்தில் இருந்து யானைகளின் அணிவகுப்பிற்கு கோங்காடு மதுவின் தலைமையிலான பஞ்சவாத்தியம் முழங்கியது. இதை கண்டு ரசிக்க திரை உலக நட்சத்திரங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மைதானத்திற்கு திரண்டு வந்தனர். இதையடுத்து, மதியம், 12:00 மணிக்கு பாரமேக்காவு பகவதி அம்மன் செம்படை மேளம் என்று அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, 15 யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளி வடக்குநாதர் சன்னதிக்கு வரும் வைபவம் நடந்தது. அதன்பின், இலஞ்சித்தறைமேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதில், 250க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செண்டை மேள வித்வான் கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமை வகித்தார். மூன்று மணி நேரத்திற்கு இடைவிடாமல் நடந்த இந்த இசை நிகழ்ச்சியால், அங்கு கூடி இருந்த பக்தர்களை பரவசமடைந்தனர். அதன்பின், மாலை, 4:30 மணிக்கு, திருவம்பாடி கோவிலுக்கு சொந்தமான, 15 யானைகள் ராஜ அலங்காரத்துடன் வடக்குநாதர் கோவில் முன் வந்து நின்றன. அப்போது, வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுரம் வழியாக, பாரமேக்காவு பகவதி கோவில் யானைகள் வெளியே வந்து சக்தன் தம்புரான் மன்னரை வலம் வந்து வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுர நடை வாயிலை நோக்கி நின்றன. இதையடுத்து, மாலை, 5:30 மணிக்கு, 30 கோவில் யானைகளின் மீதும் அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணக் குடையை மாற்றினர். இரு தரப்பினர் போட்டி போட்டு நடத்திய இந்த குடைமாற்றம் நிகழ்ச்சியை, கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். பூரம் விழாவையொட்டி நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்