சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இன்று மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியானார். இதையோட்டி குருபகவானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக அனைத்து ராசிக்காரர்களுக்கு பரிகார யாக பூஜைகளை பட்டர்கள் பாலாஜி என்ற சடகோபன், ஸ்ரீதர், கோபால், ராஜா குழுவினர் நடத்தினர். கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ.,சக்திவேல், சோழவந்தான், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், ஐயப்பன் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் குரு பகவானை தரிசித்தனர். டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை தக்கார் இளமதி,எம்.வி.எம்., குழும தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளி மயில், மருது பாண்டியன் செய்திருந்தனர்.
அலங்காநல்லுரர் தர்மசாஸ்தா கோயிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. நவகிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தன. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.