அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் பலிகடா: கைது விவகாரத்தில் அதிர்ச்சிகர பின்னணி



மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

கருத்து வேறுபாடு; இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் வசந்தா. உதவி கமிஷனராக இருப்பவர் கைலாசமூர்த்தி. கடந்த சில மாதங்களாகவே அறங்காவலருக்கும், உதவி கமிஷனருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில், வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகிய நான்கு பேரும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளனர். இதனை அறங்காவலர் வசந்தா கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, மேட்டுப்பாளையம் போலீசார், வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகியோரை கடந்த ஏப்.,25ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். அறங்காவலர் வசந்தா தலைமறைவானார். கைது செய்யப்பட்ட பூசாரிகளில் ரகுபதி, அறங்காவலர் வசந்தாவின் மருமகன். கோவில் அறங்காவலர் - உதவி கமிஷனர் இடையேயான மோதலின் உச்சகட்டம்தான் பூசாரிகள் கைது நடவடிக்கை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பரம்பரை அறங்காவலரின் உறவினர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக கோவிலின் செயல் அலுவலராக கைலாசமூர்த்தி உள்ளார். சுமார் ஒரு வருடம் 8 மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. கடைசி 4 மாதங்களில் தான் பிரச்னை உருவானது. வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கையை பூசாரிகள் எடுக்கக்கூடாது என கூறும் இவர், கோவிலின் உபகோவிலான பவானி ஆற்று அருகே உள்ள சுப்ரமணியசுவாமி கோவில், மற்றொரு உபகோவிலான மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் போன்ற கோவில்களில் தட்டு காணிக்கை எடுக்கப்படுவது குறித்து எதுவும் பேசுவது இல்லை. கைலாசமூர்த்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். ஒப்பந்தபுள்ளி கோராமல் ரூ.4 லட்சத்திற்கு கோவிலுக்கு டி.வி., வாங்கி உள்ளார். அதே போல் 4 போர்சன் பாலூட்டும் அறை கட்டப்படும் என கூறிவிட்டு 3 போர்சன் தான் கட்டியுள்ளார். அதே போல் கோவிலில் உள்ள பல்வேறு பணிகளுக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் வேண்டப்பட்டவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கினார். அதனால் அடுத்த நாள் நடக்கவிருந்த நேர்முக தேர்வை அறங்காவலர் வசந்தா ரத்து செய்தார்.

இவரின் முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் தான், பூசாரிகள் மீது தட்டு காணிக்கை கையாடல், அறங்காவலர் இதை கண்டுகொள்ளவில்லை என இவர் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸ் ஸ்டேஷனில் முதலில் எப்.ஐ.ஆர்., போடவில்லை, பின் மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வாயிலாக போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்., போடவைத்தார். இங்கு பணிபுரியும் கைது செய்யப்பட்ட பூசாரிகள் நிரந்தர பணியில் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்களாக சம்பளம் தரப்படவில்லை.

அதிர்ச்சி; பூசாரிகளாக நியமிக்கப்பட்ட ஒருவர் அறங்காவலரின் உறவினர். அறங்காவலர் தன்னிச்சையாக 4 பேரையும் பணியில் சேர்த்துள்ளார் என புகார் உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. 2019ம் ஆண்டு பூசாரிகள் நியமிக்கப்பட்ட போது, வேலைக்காக விண்ணப்பித்தவர்கள் 16 பேர், அதில் 6 பேர் மட்டுமே தகுதியானவர்கள். 6ல் 4 பேர் இங்கு உள்ளனர். மற்ற இருவரில் ஒருவர் வேறு கோவிலில் பணி புரிகிறார். ஒருவர் பணிக்கு வெகு நாட்களாகவே வரவில்லை. உதவி கமிஷனரின் இந்த மோதல் போக்கு சரியானது இல்லை. இவ்வாறு உறவினர்கள் கூறினர். புகழ்பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் பரம்பரை அறங்காவலருக்கும், உதவி கமிஷனருக்கும் இடையே உள்ள மோதல் போக்கு பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவிலின் நலன் கருதி அரசு தலையிட்டு இதற்கு ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்