காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், சீதா ராம பஜனை மண்டலி சார்பில் 32வது ஆண்டு சீதா கல்யாண மஹோத்சவ துவக்க விழா கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான கடந்த 3ம் தேதி காலை கலச ஸ்தாபனம், சுவாசினி விளக்கு பூஜை, குருகீர்த்தனை அஷ்டபதி பஜனையும், நேற்று முன்தினம் காலை விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், ராமருக்கு லக்ஷார்ச்சனை, மஹா தீபாராதனை, அஷ்டபதி மற்றும் தாசர் கீர்ததனை, திவ்யநாமம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று, காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனை நடந்தது. விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு பாகவத ஸம்ப்ரதாய முறைப்படி சீதா கல்யாண வைபோகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சங்கரமடம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதம் கொண்டு வரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. திருவிடைமருதுார் முத்துகிருஷ்ண பாகவதர்குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.