டிசம்பர் 23,2017
சபரிமலை: ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து சபரிமலைக்கு தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டல பூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.
பத்தனம் திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரி வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி பம்பை வந்தடையும். நேற்று அதிகாலை ஐந்து மணி முதல் கோயில் முன்புறம் இந்த அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் 7:30-க்கு அங்கி ரதத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. நேற்று இரவு ஓமல்லுார் பகவதி கோயிலில் இந்த பவனி தங்கியது,
இன்று காலை அங்கிருந்து புறப்படும் பவனி இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலில் தங்குகிறது. நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, இரவு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்குகிறது. 25ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் அங்கி மதியம் மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படும். 5:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்க அங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.