SS சிவகாமி அம்மன் பொன்னூசல் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவகாமி அம்மன் பொன்னூசல்
சிவகாமி அம்மன் பொன்னூசல்
சிவகாமி அம்மன் பொன்னூசல்

(தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் மாணவரும்
பழ.தரும.ஆறுமுகம் (பெரிய தோட்டம்) அவர்கள் இயற்றியது)

1. அப்பம் அவல் பொரி விரும்பும் ஐங்கரத்தான்
அன்னை சிவ சங்கரியே ஆடீர் ஊசல்
சுப்பிரமா மணிவள்ளி தெய்வ யானை
சுடர் வேலன் தாயாரே ஆடீர் ஊசல்
எப்பொழுதும் சிரவணமா புரத்தீசன் தன்
இடப்பாகம் கொண்டருள்வீர் ஆடீர் ஊசல்
செப்பரிய சீர் நலம்சேர் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

2. இமயமலைப் பார்வதியே ஆடீர் ஊசல்
எங்கள் குல தேவதையே ஆடீர் ஊசல்
குமரியிலே கன்னிகையாய்க் கோயில் கொண்ட
குணக்குன்றே தவத்தகையே ஆடீர் ஊசல்
சமயபுரம், பண்ணாரி, திருவேற் காட்டில்
சார்மாரி யம்பிகையே ஆடீர் ஊசல்
திமதிம் எனமுழவொலிக்கச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

3. திருக்கடவூர் அபிராமி ஆடீர் ஊசல்
திருக்காஞ்சிக் காமாட்சி ஆடீர் ஊசல்
திருமதுரை மீனுட்சி ஆடீர் ஊசல்
திருமயிலைக் கற்பகமே ஆடீர் ஊசல்
அருள்பொழியும் அவிநாசி ஆலயத்தில்
அன்னை கருணாம்பிகையே ஆடீர் ஊசல்
செருக்கடையா(து) எமைக்காக்கச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

4. தேசமெலாம் புகழ்தில்லைச் சிதம்பரத்தில்
திருநடம்செய்தேவீ நீர் ஆடீர் ஊசல்
பேசு புகழ்ப் பட்டீசன் பேரூர் தன்னில்
பெறும் பச்சை மரகதமே ஆடீர் ஊசல்
ஆசுகவிப் புலவர்களுன் அடிகள் போற்ற
அறம் வளர்த்த நாயகியே ஆடீர் ஊசல்
தேசுடையோர் புகழ்பரப்பும் சிரவையூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

5. திங்கள் அணி கங்கைமுடிச் சிவன் தனக்குத்
தேர்ந்தெடுத்த நற்றுணையே ஆடீர் ஊசல்
மங்கையர்க்குத் தனியரசி மகிழ்ந்து போற்றி
வணங்க அருள் தந்தவரே ஆடீர் ஊசல்
எங்கள் குரு முதல்வர் திரு ராமா னந்தர்
ஏத்த அருள் செய்தவரே ஆடீர் ஊசல்
செங்கமல அடிகாட்டிச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

6. சீர் காழித் திருத்தலத்தில் சம்பந்தர்க்குத்
திருமுலைப்பால் சுரந்தவரே ஆடீர் ஊசல்
பார்புகழும் அபிராமி பட்டர் பாடப்
பவுர்ணமியாய் ஒளிர்ந்தவரே ஆடீர் ஊசல்
கார் முகிலாய்க் கவுமாரக் கந்தச்சாமி
கவிபொழியச் செய்தவரே ஆடீர் ஊசல்
தேர்வலம் செய் திருவீதிச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

7. பந்த பாசங்கள் அறப் பணிவோர் தங்கள்
படுதுயரம் தீர்த்திடுவீர் ஆடீர் ஊசல்
வந்தனைக்குச் செவிசாய்ப்பீர் ஆடீர் ஊசல்
வரும் இடர்கள் மாற்றிடுவீர் ஆடீர் ஊசல்
சந்ததமும் சுந்தரமா முனிவர் போற்றச்
சரண் அளித்த சங்கரியே ஆடீர் ஊசல்
சிந்தனை மிக் கவர் வாழும் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

8. தவத் தவரின் தவப்பொருளே ஆடீர் ஊசல்
சமத்துவ மெய்ச் சிவத்துமையே ஆடீர் ஊசல்
சுவைத் தமிழின் தனிச்சுவையே ஆடீர் ஊசல்
சுமப்பவரின் சுகச்சுமையே ஆடீர் ஊசல்
பவக்கடலில் அலைக்கழியும் மனக் கலக்கம்
பணித்திடு மெய்ப் படைக்கலமே ஆடீர் ஊசல்
சிவத்திலகம் எனத்திகழும் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

9. நாரணியே நற்பரையே ஆடீர் ஊசல்
நான் மறையின் நவில் பொருளே ஆடீர் ஊசல்
பூரணியே புரந்தரியே ஆடீர் ஊசல்
புண்ணியத்தின் புண்ணியமே ஆடீர் ஊசல்
காரணியே கார்முகிலே ஆடீர் ஊசல்
கன்னல் மொழிக் கௌமாரீ ஆடீர் ஊசல்
சீரணியாய்த் திகழ்ந்திலகு சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

10. திரு முகத்தில் பொலிவுடையீர் ஆடீர் ஊசல்
திலகம் ஒளிர் பிறை நுதலீர் ஆடீர் ஊசல்
கருணை பொழிகண்ணுடையீர் ஆடீர் ஊசல்
கங்குல் நிறக் கார் குழலீர் ஆடீர் ஊசல்
மருவுமிதழ்ப் புன்னகையீர் ஆடீர் ஊசல்
வளம் வழங்கு கரம் உடையீர் ஆடீர் ஊசல்
திருவடிகள் சரண் அடைந்தோம் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

வாழி விருத்தம்

11. கார் முகில்கள் மழைபொழிக பயிர் விளைக
கல்வியுடன் ஒழுக்கம் ஓங்க
சீர் பெருகு சான்றோர்கள் சிறந்திடுக
திருப்பணி செய் தொண்டர் வாழ்க
பார்புகழும் கண்மணியாய்ச் சிரவைநகர்
பாரதத்தில் பரந்தே வாழ்க
நேர்மைமிகு சைவநெறி நிலவுலகில்
நிறைந்தோங்கி வாழ்க வாழ்க.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar