SS பகளாமுகீ வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பகளாமுகீ வழிபாடு
பகளாமுகீ வழிபாடு
பகளாமுகீ வழிபாடு

தசமஹா தேவியர்களில் எட்டாவது சக்தியாக விளங்கி அருளுபவள் பகளாமுகீ தேவி. அசுரனை தண்டிக்கும் கோலத்தில் இந்த தேவியை தியானிப்பது மரபு. நமது சனாதன தர்மத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாஸனையும் உலக நன்மைக்காகத்தானே தவிர, தனி மனித விருப்பு-வெறுப்புகளை நிறைவேற்றி கொள்வதற்காக அல்ல. இதை நாம் புரிந்து கொண்டோமானால் நாம் இந்த தேவதைகளின் பெருமைகளை மேலும் அறியலாம். இதுபோன்று தீமைகளை அழிக்கம் தெய்வங்களை நாம் வணங்கும் போது, நம்மில் இருக்கும் அசுரத்தன்மை விலகி, நம்மை சுற்றி இருக்கும் தீமைகளும் போக்கப்படுகிறது. அசுரர்கள், தேவர்களை அழிக்க சில ஆபிசார பிரயோகங்கள் செய்த வஸ்துக்களை புதைத்து விட்டுச் சென்றனர். புதைத்துவிட்ட சென்ற வஸ்துக்களை க்ருத்யா என்று கூறுவர். அவற்றை அழிக்கும் வாக்கு அல்லது சொல்லுக்கு, வலகஹனம் என்று பெயர்.

வலகா என்பது பலகா என மறுவி, பிறகு பகளா என்று அமைந்தது. அதனுடன் முகி சேர்ந்து பகளாமுகி என்ற பெயர் ஏற்பட்டது. முகி என்பதற்கு பிளப்பது என்று பொருள். அதாவது, தீயவற்றைப் பிளக்கும் சக்தியாக பகளாமுகீ தேவியானவள் போற்றப்படுகிறாள். அதர்வண வேதத்தில் பகளா சூக்தம், யஜுர் வேதத்தில் ஆபிசாரிகப் பிரகரணம் ஆகியவற்றில் இந்த தேவியின் தன்மை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பகளா எனில் பேசக்கூடிய சக்தியை அளிப்பவள் என்றும் கூறப்படுகிறது.  இந்த பராசக்தியானவள் ஸ்ரீமந்நாராயணருக்கும் சிவபெருமானுக்கும் உதவினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எல்லாம்வல்ல முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் இந்த சக்தியின் மந்திரத்தை அளித்து, பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தச் செய்தார் என்று புராணங்கள் இந்த தேவியின் சிறப்பினை இயம்புகின்றன.

இந்த அன்னையின் சக்தியானது வீண்வாதம் செய்பவர்களின் வாக்கு, முகம், கால் இவற்றை ஸ்தம்பிக்கச் செய்து, நல்லோருக்கு வெற்றியை அளிக்கவல்லது. பிறர் செய்யும் தீய செயல்களில் இருந்து நம்மைக் காக்க வல்லது. மஞ்சள் வண்ணப் பூக்களால் இந்த தேவியை அர்ச்சித்ததால், வேண்டிய பலன் கிடைக்கும். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட மாதா பகளாமுகி தேவியானவள் நம்மையும், நமது குடும்பத்தாரையும், நமது நாட்டையும் தீயவர்களில் இருந்து காத்து நன்மை புரியட்டும்.

ஸ்ரீபகளாமுகீ காயத்ரி:

ஓம் பகளாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மூல மந்திரம்:

ஓம் பகளாமுக்யை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar