Advertisement

கார்த்திகை பலன்: ரிஷபம்


கார்த்திகை 2, 3, 4ம் பாதம்
இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ராசிநாதன் சுக்ரன் நீசம் பெற்றாலும், நவ.17 மாலை முதல் ஆட்சி பலம் பெறுவதால் கவலை இல்லை. அதே நேரம் ஜென்ம ராசியில் ராகுவின் நீச பலம் வீண் பதட்டத்தை தந்து செயலில் தடையை உருவாக்கும். முக்கிய பணிகளில் நேரடியாக ஈடுபட இயலாமல் போகும். தக்க துணையோடு எந்த செயலிலும் ஈடுபடுவது நன்மை தரும். இக்கட்டான சூழலில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். சேமிப்பு உயர்வடையும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். காரமான உணவுகளை ருசிப்பதில் ஆர்வம் கூடும். அண்டை வீட்டாரோடு இணைந்து செயல்பட்டு உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பயணத்தின்போது நிகழும் சந்திப்பால் நட்பு வட்டம் விரிவடையும். உறவினரோடு கருத்துவேறுபாடு உண்டாகும். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்களுக்குத் துணை நிற்பீர்கள். மூட்டு, முதுகு, இடுப்பு வலி பிரச்னைகளால் சிரமப்படலாம். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். வயதில் மூத்தவர்களுக்கு பணிவிடை செய்து நிம்மதி காண்பீர்கள். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் கீழ்நிலைப் பணியாளர்களை சார்ந்திருக்கும் நிலை வரும். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளில் இறங்குவர். மாணவர்கள் மொழிப்பாடங்களில் கவனம் செலுத்துவும். தக்க துணையோடு செயல்பட வேண்டிய மாதம் இது.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபடுவது நல்லது. சந்திராஷ்டமம் : நவ. 17, 18, டிச.15
ரோகிணி :
இந்த மாதத்தில் அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள். எனினும் நவ. 25 முதல் செயல் வேகம் குறைவதை உணர்வீர்கள். எந்தப் பணியை யாரைக் கொண்டு எளிதாக முடிக்கலாம் என உணர்ந்து நடைமுறைப்படுத்துவது நல்லது. இந்த மாதத்தில் அவசரத்தை கைவிட்டு நிதானத்தோடு செயல்படுவது அவசியம். அவசரமாகச் செயல்பட்டால் அலைச்சல் அதிகமாவதோடு வீண் பொருளிழப்பும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருள் வரவு சீராக இருந்து வரும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது வெளிப்படும் வார்த்தைகள் வீண் பிரச்னையைத் தோற்றுவிக்கலாம். அண்டை அயலாரோடு கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்புண்டு. குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பிரயாணத்தின் போது முக்கியமான நபர் ஒருவரின் சந்திப்பு நிகழும். அவரது தொடர்பு தொழில்முறையில் திருப்புமுனையைத் தரும். பிள்ளைகளின் செயல்கள் மன வருத்தத்தினைத் தரக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன் தரும். சிக்கன நடவடிக்கைகள் ஒரு சில நேரத்தில் பணியில் தாமதத்தை ஏற்படுத்தும். வேலைக்குச் செல்வோர் தற்காலிக இடமாற்றத்தினை சந்திப்பர். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்குரிய லாபம் நிச்சயம் கிட்டும். மாணவ, மாணவியர் ஞாபகமறதியால் சிரமம் காண்பர். தடுமாற்றத்தைத் தவிர்த்து திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேற்றம் காணும் மாதம் இது.
பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 18, 19

மிருகசீரிடம் 1, 2ம் பாதம்
எந்த ஒரு வேலையையும் நிதானமுடன் செய்யுகள். செய்யும் பணியில் தவறு நேருமோ என்ற அச்சம் அதிகரிக்கும். ஜென்ம ராசிநாதன் சுக்கிரன், நட்சத்திர அதிபதி செவ்வாய் ஆகியோரின் சாதகமான சஞ்சார நிலை தவறேதும் நிகழாத வண்ணம் உங்களை வழிநடத்தும். இனி வீண் கவலை தேவை இல்லை. குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்ற ஓயாமல் உழைப்பீர்கள். பண வரவு தொடர்ந்தாலும் அதற்கேற்ப செலவும் காத்திருக்கும். ஆடம்பர செலவு என நினைத்தாலும் கவுரவம் கருதி செய்யும் கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சந்திராஷ்டம நாட்களில் நெருக்கமானவர்களோடு கருத்து வேறுபாடு உருவாகலாம். செல்போன், ரிமோட் கண்ட்ரோல் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எங்காவது மறதியாக வைத்து விட்டு அவதிப்படுவீர்கள். வாகன பராமரிப்புச் செலவு கூடும். வயது முதிர்ந்த உறவினர் ஒருவர் மூலமாக குடும்ப சம்பிரதாயங்களை அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் உயர கூடுதலாக செலவழிக்க நேரிடும். உடல்நிலையில் தோன்றும் சிரமங்களை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் தடுமாறுவீர்கள். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். சுயதொழில் செய்வோர் நேரம் காலமின்றி உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க வேண்டிய மாதமாக அமையும்.

பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும். சந்திராஷ்டமம் : நவ. 19

Advertisement
 
Advertisement