Advertisement

தனுசு : மாசி மாத ராசி பலன்

மூலம் : சிறப்பான கிரக அமைப்போடு இந்த மாதத்தினைக் காண உள்ள உங்களுக்கு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையும். சனி, சுக்ரன் ஆகியோரின் அமைப்பு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் உங்களை முதலீடு செய்ய வைக்கும். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது. நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் வரவினைக் காணத் துவங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த கருத்துக்களை பிரயோகித்து கவுரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகக் கூடும். பிரயாணத்தின்போது புதிய நட்புறவு உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும் வகையில் அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். வீட்டினில் ஆடம்பர பொருட்கள் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பெற்றோரால் ஒரு சில தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரிடலாம். நிதானமான செயல்களால் நற்பெயர் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களை உருமாற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அநாவசிய செலவுகள் முற்றிலுமாக கட்டுக்குள் இருந்து வரும். உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு நற்தகவல் வந்து சேரும். தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை உடனுக்குடன் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : மஹாசிவராத்திரி விரதம் - சிவாலய தரிசனம்
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 24

பூராடம் : ராசிநாதன் குரு பகவானின் நிலையும், இன்னபிற கிரகங்களின் நிலையும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் சிறப்பான நற்பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் தேவை என்று நினைக்கும் பொருட்கள் வந்து சேரும். மனதளவில் அவ்வப்போது லேசான குழப்பத்திற்கு ஆளாகி வந்தாலும் சுகமான வாழ்வியல் நிலையில் எந்தக் குறையும் நேராது. பொருள் வரவு சிறப்பான முறையில் இருந்து வரும். உங்களையும் அறியாமல் வாயிலிருந்து கடுமையான சொற்கள் வெளிப்படலாம். அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவது நல்லது. குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்பினை போக்க முயல்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய நிலை உண்டாகும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆதாயத்தினைத் தரும் வகையில் இருக்கும். தாயார் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதமாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் சிறிது சுணக்கம் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆவல் கொள்வீர்கள். கடன் கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பிப்ரவரியின் இறுதி வாரத்தில் கூடுதல் செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். தொழில் நிலை சிறப்பாக இருந்து வரும். இதுநாள் வரை காத்திருந்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். சுயதொழில் செய்வோர் நல்ல தன லாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : சங்கடஹரசதுர்த்தி பூஜை.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 24, 25

உத்திராடம் 1ம் பாதம் : ராசிநாதன் குரு பகவான் நீசம் பெற்றாலும் இரண்டில் இருப்பதால் நிம்மதியான வாழ்வியல் நிலை தொடர்கிறது. எண்ணிய காரியங்களை வேகமாக நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலைமை ஒரே சீராக இருந்து வரும். மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானம் வலுப்பெற்று காணப்படுகிறது. மூன்றாம் இடத்தில் இணைவு பெறும் சூரியன் மற்றும் இதர கிரகங்களால் மற்றவர்கள் செய்யத் தயங்கும் காரியங்களில் கூட அசாத்தியமான தைரியத்துடன் களமிறங்குவீர்கள். உடன் சமயோஜித புத்தியைத் தரும் புதனும் துணை நிற்பதால் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயத்தினைத் தரும் வகையில் அமையும். மாணவர்களின் கல்வி நிலை குருபகவானின் அருளால் சிறப்பாக இருந்து வரும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டாகும். பிரயாணத்தின் போது சரியான துணையுடன் செல்வது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் கூடுதல் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை அதிக விலைக்கு வாங்கும் நிலை உண்டாகக்கூடும். அடுத்தவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அவசியம். சிறுசிறு அலைச்சல்கள் உண்டானாலும் நிறைய புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். அனுபவப் பாடங்கள் ஆதாயம் தரும் வகையில் இருக்கும். பிள்ளைகளில் தைரியமான செயல்கள் உங்களை பெருமை கொள்ளச் செய்யும். சிந்தனையின் வேகம் செயலில் தெரியும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். ஆறுமாதம் கழித்து செல்ல உள்ள தொலைதூரப் பிரயாணங்களுக்காக இப்பொழுதே திட்டமிடுவீர்கள். தொழில் ரீதியாக தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் சிறு அலைச்சலுக்கு ஆளாவார்கள். ஆயினும் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலனைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : ஸ்ரீ வாராஹி அன்னை
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 25

Advertisement
 
Advertisement