Advertisement

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொழிலில் போட்டி! பெறுவீர்கள் வெற்றி!

பெற்றோர் மீது அன்பு மிக்க மேஷ ராசி அன்பர்களே!

புதன் மார்ச் 5 வரையிலும், குரு மார்ச் 10 வரையிலும் சாதகமான நிலையில் உள்ளனர். சூரியன், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நற்பலனை தரக்
காத்திருக்கின்றனர். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசாங்க வகையில் சலுகை கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மரியாதை சிறப்பாக இருக்கும். குரு மார்ச் 10ல் வக்ரம் அடைவதால் மனதில் தளர்ச்சி ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க யோகமுண்டாகும். மாத தொடக்கத்தில் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பெண்களால் பொன், பொருள் சேரும். கணவன்-, மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மார்ச் 3,4ல் சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். பிப்.26,27ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். செவ்வாயால் இருந்த பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் பிப்.26க்கு பிறகு மறையும். ராகுவால் குழப்பம் ஏற்பட்டாலும் குருபலத்தால் அது வந்த வேகத்தில் மறையும். பிப்.19,20ல் வீண் விவாதங்களைத் தவிர்த்து வழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த நாட்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கப் பெற்று விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பிப்.,16க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். பிப்.28 மார்ச் 1,4,5ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஆனால், பிப்.14,15, மார்ச் 13ல் அதிர்ஷ்டவசமாக பணம் வர யோகமுண்டு. போட்டி இருந்தாலும் எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். மார்ச் 5க்கு பிறகு சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

பணியாளர்களுக்கு புதனின் பலத்தால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் பாராட்டும், பரிசும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பிப்.24,25 சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் தடைகளை முறியடித்து புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும்.

அரசியல்வாதிகள் சிறப்பான பலனை அடைவர். தொண்டர் மத்தியில் அந்தஸ்து உயரும். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்வர்.

மாணவர்கள் புதனால் கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மார்ச் 5க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகள் நெல், கோதுமை, சோளம், எள், கரும்பு போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். மாத முற்பகுதியில் காய்கறி மூலம் வருமானம் பெருகும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வழக்கு விவகாரத்தில் மெத்தனப் போக்கு வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். உங்களின் பங்களிப்பால் குடும்பவளர்ச்சி கூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மார்ச் 6,7,8 ல் புத்தாடை அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பிப். 16,17,18 சிறப்பான நாட்களாக அமையும்.

நல்ல நாள்: பிப்.14,15,16,17,18,24,25, 26,27 மார்ச்2,3,6,7,8,13

கவனநாள்: பிப்.19,20 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: பச்சை , சிவப்பு

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

Advertisement
 
Advertisement