Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சேமிப்பு

கருணை மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!

குரு,சுக்கிரன்,சனி நற்பலன் கொடுப்பர். அதோடு புதன் அக்.23 வரையும், நவ.13க்கு பிறகும் நன்மை தருவார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அதை குரு, சனி முறியடித்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வர். மனதில் ஆற்றல் மேம்படும். குருபகவானால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் சிறக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். அக்.23 வரை பொன், பொருள் சேரும். ஆடம்பர வசதிகள் பெருகும். அதன்பின் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்.27,28ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் நவ.6,7,8ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அக்.31, நவ.1ல் சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். அவர்களால் நன்மை உண்டாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ராகுவால் அக்கம்பக்கத்தினர் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம்.

பணியாளர்கள் குருவால் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.23க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். அதன் பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். நவ. 24,25,26 ஆகியவை அனுகூலமான நாட்களாக அமையும்.
நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் சனிபகவானால் முன்னேற்றமான காலகட்டமாக அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அக்.24 முதல் நவ.13 வரை தொழில் ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படலாம். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும் நவ.11,12 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அக்.29,30, நவ.2,3ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். நவ.13க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சீரான பலனைக் காணலாம். பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். நவ.9,10ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டிகளில் வெற்றி பெறலாம். அக்.24 முதல் நவ.13வரை சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். ஆனால் குருவால் பிரச்னையை முறியடித்து வெற்றி காணலாம். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மஞ்சள், கரும்பு, எள், பயறு வகைகள், காய்கறிகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். நவ.13க்கு பிறகு கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் உயரும். நவ.4,5 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். அக்.18,19,நவ. 13,14,15ல் விருந்து, விழா என செல்வீர்கள். நவ.13க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும்.

உடல்நலம் அதிருப்தியளிக்கலாம். செவ்வாயால் இருந்த அலைச்சல், வீண்பிரச்னை முதலியன அக்.27க்கு பின் மறையும்.

* நல்ல நாள்: அக்.18,19,24,25,26,27,28,31,நவ.1,4,5,11,12,13,14,15
கவன நாள்: அக்.21,22,நவ.16 சந்திராஷ்டமம்.

* அதிர்ஷ்ட எண்:1,5
* நிறம்: மஞ்சள், வெள்ளை

* பரிகாரம்:
● தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்

Advertisement
 
Advertisement