Advertisement

கும்பம்: புரட்டாசி ராசி பலன் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிள்ளைகளால் பெருமை

இந்த மாதம் புதன் செப்.25 வரை நற்பலன் கொடுப்பார். அதோடு சுக்கிரன், கேது, சனி மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சுக்கிரனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சனி, கேதுவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

குடும்பத்தில் புதனால் நன்மை பெருகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அக்.10,11ல் சகோதரிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். அக்.5,6ல் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.20,21, அக்.17ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.25க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலரின் பொல்லாப்பை சந்திக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். தனியார் துறையில் இருப்பவர்கள் புதனால் சிறப்பான நிலையில் இருப்பர். வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். செப்.25க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவைப்படும். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அக்.3,4 சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.

வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பகைவர் தொல்லைகள் மறையும். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.7,8,9,12,13,14ல் சந்திரனால் இடையூறுகள் வரலாம். செப்.24,25ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். இடையூறை முறியடிக்கும் வல்லமை பிறக்கும். செப்.25 க்கு பிறகு சிலர், தீயோர் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்கலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் அலைச்சல், சிரமத்திற்கு ஆளாவர். எதிரிகளால் பிரச்னை வரலாம். ராகுவால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும். பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக இருக்கும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். செப்.25 க்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம்.

விவசாயிகள் சீரான நிலையில் இருப்பர். பாசிப்பயறு, காய்கறி, கீரை வகைகள், மற்றும் பழ வகைகள் ஆகியவற்றில் நல்ல மகசூலைக் காணலாம். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். செப்.25க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. வழக்கு, விவகாரங்களில் முடிவு சீராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

பெண்களுக்கு சகோதரர்கள் மிக ஆதரவுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி அடைவர். செப்.18,19, அக்.15,16ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருள் கிடைக்கப் பெறலாம். செப்.24,25ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். தோழிகள் ஆதரவுடன் இருப்பர். செப்.25க்கு பிறகு வீட்டுக்கு வெளியே பெருமையாக பேசப்பட்டாலும், வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். அக்.5க்கு பிறகு சுக்கிரனால் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

செவ்வாயால் செப்.26க்கு பிறகு உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.

* நல்ல நாள்: செப்.18,19, 24,25,26,27, அக்.3,4,5,6, 10,11,15,16
* கவன நாள்: செப்.28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,8
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம் :
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்
● பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

Advertisement
 
Advertisement