Load Image
Advertisement

சிம்மம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

மகம்; எச்சரிக்கை அவசியம்

கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில், குடும்ப ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் சனி என்ற சஞ்சார நிலைகளால் குடும்பத்தில் பிரச்னைகள் உருவாகும் அலைச்சல் அதிகரிக்கும். இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்க நேரும். வேண்டாத நண்பர்களால் சங்கடம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பாலினரால் தடுமாற்றம் உண்டாக்கும். நேற்றுவரை அதிநட்பாக இருந்தவர்கள் எல்லாம் விலகும் நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை அதிகரிக்கும். மனதில் குழப்பம் நீடிக்கும்.

சனி சஞ்சாரம்
சனி சப்தம ஸ்தானத்தில் கண்டகச் சனியாக சஞ்சரித்தாலும் மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் செயல்கள் லாபமாகும். சங்கடங்கள் விலகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். கண்டகச் சனியின் பாதிப்பு இல்லாமல் போகும்.

ராகு - கேது சஞ்சாரம்
2024 முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், தன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் மனதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி தோன்றும். தொழிலில் தடையும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகும். உடல் நிலையில் எதிர்ப்பாராத சங்கடம் தோன்றும். வேலையில் அலைச்சல், நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். நட்புகளுக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் தோன்றும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எண்ணங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சங்கடங்களை சமாளித்து வெற்றி பெறும் நிலை உண்டாகும். மே 1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் நெருக்கடி ஏற்படும். பணியில் பிரச்னைகள் தோன்றும். பொருளாதாரத்தில் தடை ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
அக். 18 - நவ. 25 வரையிலும், ஜன 15 - பிப் 12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும் சூரிய பகவான் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சி யாவும் வெற்றியாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். புதிய தொழில் தொடங்கும். முயற்சிகள் வெற்றியாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு, பதவி உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும்.

பொதுப்பலன்
ஏப்.30 வரை குருவின் சஞ்சாரத்தால் சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பம், தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். அதன்பின் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் தோன்றும். நட்புகளுக்கிடையே கசப்பு உண்டாகும். செயல்களில் டென்ஷன் அதிகரிக்கும். அதனால் வார்த்தைகளில் கோபம் வெளிப்படும். எந்த இடத்திலும் இணக்கமாக இருக்க முடியாமல் போகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். புதிய முயற்சியில் இழுபறி ஏற்படும் என்றாலும் சூரியனின் 3,6,10,11 இடங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் நன்மை அதிகரிக்கும்.

தொழில்
மருத்துவம், கால்நடை, இயந்திரம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெடிக்கல், ஏற்றுமதி, இறக்குமதி ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் லாபமாக நடக்கும் என்றாலும் உழைப்பும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். பொறுப்புடன் வேலை செய்து மேலிடத்தில் நற்பெயரை வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், விரும்பிய இட மாற்றம் உண்டாகும். தனியார் துறை பணியாளர்கள் முதலாளியால் பாராட்டப்படுவீர்கள்.

பெண்கள்
சங்கடங்கள் மறைய ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பு அதிகரித்தாலும் தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். சொத்து சேர்க்கை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
உங்கள் ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் ஆசிரியர்கள் ஆலோசனை இக்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். தேர்வில் வெற்றி உண்டாகும்.

உடல்நிலை
ஆயுள் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும். வாகனம், விஷ ஜந்துக்கள், மருந்து, மாத்திரைகளாலும் பாதிப்பு உண்டாகும். சிலர் இனம்புரியாத நோய்க்கும் ஆளாகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
சிந்தித்து செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். பூர்வீக சொத்துகளை அடையும் வாய்ப்பு ஏற்படும். விரும்பிய கல்விநிறுவனத்தில் சேர்வீர்கள். வசதியான இருப்பிடம் அமையும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக அது முடிவிற்கு வரும்.

பரிகாரம்
ராகு காலத்தில் துர்கை, எமகண்ட காலத்தில் விநாயகரையும் வழிபட சங்கடங்கள் விலகும்.
பூரம்; உழைப்பு அதிகரிக்கும்

சுக்கிரன், சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, தன ஸ்தானத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் பலன்களில் பின்னடைவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிவு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். வீண் அலைச்சல், தீயோர் சேர்க்கையால் அவப்பெயர், வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் பாதிப்பு, வெளியூரில் வாழும் நிலை. எதிர்பாலினரால் சங்கடம், பண விரயம் உண்டாகும் என்பது பொது விதி. இருந்தாலும் ஒருவரின் சுய ஜாதகத்தின் கிரக அமைப்பு, திசா புத்தி போன்றவைகளால் இவற்றிலிருந்து மாற்றமும் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
இந்த ஆண்டில் கண்டகச் சனியாக சஞ்சரித்தாலும் ஜன 1 - பிப் 15 வரை தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர நிலைகளிலும் நற்பலன் உண்டாகும். ஏழாமிட சனியின் பாதக பலன் விலகும். நினைத்ததை சாதிக்கும் செயல்பாடு உங்களுக்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை, நவீன வாகனம், பொருள் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மறைவு ஸ்தானமான மீனத்திலும், கேது குடும்ப ஸ்தானமான கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் நிலையில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் உருவாகும். எதிர்பாலினரால் குடும்பத்திற்குள் தேவையற்ற சங்கடம் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடி அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த ஒவ்வொன்றும் லாபத்தில் முடியும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். மே 1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நிலையில் சங்கடம் அதிகரிக்கும். தொழிலில், பணியில் நெருக்கடி தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும் என்றாலும் குருவின் பார்வையால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். புதிய இடம், மனை, பொன் பொருள் என வாங்கக் கூடிய நிலை உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
அக்.18 - நவ.25 வரையிலும், ஜன.15 - பிப்.12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் விலகும், அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வழக்குகள் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். அலுவலர்களுக்கு வேலை நீக்கம், விசாரணை என்ற நிலையில் மாற்றம் உண்டாகும். மீண்டும் செல்வாக்குடன் பழைய உத்தியோகத்தில் தொடர்வீர்கள்.

பொதுப்பலன்
உங்களின் தனித்தன்மை வெளிப்படும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். சிலர் குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும்.

தொழில்
தொழிலில் சில சங்கடம் ஏற்படும். கூட்டுத்தொழில் இக்காலத்தில் பிரச்னைகளில் முடியும். புதிய முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்தாமல் போகும். சினிமா, சின்னத்திரை, பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளி, கவரிங், நகை, வாகனம், ஆடம்பர பொருட்கள், குடிநீர் வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்படும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் துறை பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வை அடைய முடியும். முதலாளிகளால் மதிக்கப்படுவீர்கள்.

பெண்கள்
உத்தியோகத்தில் இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் தொந்தரவு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பர். அவர்கள் மீது அக்கறை அதிகரிக்கும். உறவினரிடம் செல்வாக்கு உயரும். புதியவர்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். குடும்ப ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

கல்வி
மாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதற வாய்ப்புண்டு. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து படிப்பில் கவனம் செலுத்துவதும், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவதும் வெற்றியை உண்டாக்கும்.

உடல்நிலை
அஷ்டம ராகுவும், சப்தம சனியும் போட்டி போட்டு உடல் பாதிப்பை உண்டாக்குவர். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு மறைமுக, பரம்பரை நோய்கள் தோன்றி சங்கடப்படுத்தும் என்றாலும் சிகிச்சையால் குணமாகும்.

குடும்பம்
உழைப்பின் காரணமாக வருவாய் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய இடம் வாங்கி உங்கள் விருப்பப்படி வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் வீட்டில் அமைதி நிலைக்கும்.

பரிகாரம்
மகாவிஷ்ணு, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.
உத்திரம்; வீடு கட்டுவீங்க

சூரிய பகவான் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

2024 ஆண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பில் இழுபறி, காரியங்களில் தடை, வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் பிரபல யோக காலமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் ஏற்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். எதிரிகளை அடக்கி வெற்றி பெற முடியும். அபார ஆற்றல் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4 - டிச 31 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்கிடுவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சிகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024 முழுவதும் யோகத்தை வழங்குவார். நினைத்ததை அடைவீர்கள். முயற்சியை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். நண்பர்கள் விலகிச் செல்வர்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 1ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் வந்தாலும் சமாளிக்கும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார். குழப்பத்தை அதிகரிப்பார்.
மே1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். பணம், பதவி, பட்டம் என்ற நிலையுடன் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார். அதிர்ஷ்டகரமான நிலையை உருவாக்குவார். சங்கடங்களை எல்லாம் நீக்கி வைத்து பொன் பொருள் செல்வாக்கு என உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். பண வரவை அதிகரிப்பார்.

சூரிய சஞ்சாரம்
உத்திரம் 1, ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அக்.18 - நவ.25 வரையிலும், ஜன 15 - பிப் 12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக 16 வரையிலும், நவ.16 - டிச.15 வரையிலும் சூரிய பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிரிகளை பலமிழக்க வைப்பார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.

பொதுப்பலன்
2024 ல் 1ம் பாதத்தினருக்கு குருபகவானின் சஞ்சாரமும், 2,3,4ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சாரமும் பெரிய யோகத்தை வழங்கும். நெருக்கடி விலகும். முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்டாக அமையும்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், சினிமா, விவசாயம், டிரான்ஸ்போர்ட், வழக்கறிஞர், மருத்துவர் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணியாளர்களுக்கு சங்கடங்கள் விலகும். உங்கள் திறமை இனி மதிக்கப்படும். ஊதிய உயர்வு உண்டாகும். வேலையில் பொறுப்பு உயரும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக தனி மதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
குழப்பங்கள் இனி விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இக்காலத்தில் மனதில் வேறு சிந்தனைகள் வேண்டாம். நட்புகளின் வழியே சில சங்கடங்கள், அவமானங்கள் தோன்ற வாய்ப்புண்டு.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். படிப்பில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்நிலை
நீண்ட நாளாக உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொற்றுநோய், பரம்பரைநோயால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இதுவரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் இனி நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு விலகும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தவர்கள் தொழிலை ஆரம்பித்து லாபம் காண்பீர்கள். சிலருக்கு, திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement