Load Image
Advertisement

கன்னி : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

உத்திரம்; வீடு கட்டுவீங்க

சூரிய பகவான் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

2024 ஆண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பில் இழுபறி, காரியங்களில் தடை, வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் பிரபல யோக காலமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் ஏற்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். எதிரிகளை அடக்கி வெற்றி பெற முடியும். அபார ஆற்றல் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4 - டிச 31 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்கிடுவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சிகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024 முழுவதும் யோகத்தை வழங்குவார். நினைத்ததை அடைவீர்கள். முயற்சியை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். நண்பர்கள் விலகிச் செல்வர்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 1ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் வந்தாலும் சமாளிக்கும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார். குழப்பத்தை அதிகரிப்பார்.
மே1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். பணம், பதவி, பட்டம் என்ற நிலையுடன் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார். அதிர்ஷ்டகரமான நிலையை உருவாக்குவார். சங்கடங்களை எல்லாம் நீக்கி வைத்து பொன் பொருள் செல்வாக்கு என உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். பண வரவை அதிகரிப்பார்.

சூரிய சஞ்சாரம்
உத்திரம் 1, ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அக்.18 - நவ.25 வரையிலும், ஜன 15 - பிப் 12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக 16 வரையிலும், நவ.16 - டிச.15 வரையிலும் சூரிய பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிரிகளை பலமிழக்க வைப்பார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.

பொதுப்பலன்
2024 ல் 1ம் பாதத்தினருக்கு குருபகவானின் சஞ்சாரமும், 2,3,4ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சாரமும் பெரிய யோகத்தை வழங்கும். நெருக்கடி விலகும். முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்டாக அமையும்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், சினிமா, விவசாயம், டிரான்ஸ்போர்ட், வழக்கறிஞர், மருத்துவர் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணியாளர்களுக்கு சங்கடங்கள் விலகும். உங்கள் திறமை இனி மதிக்கப்படும். ஊதிய உயர்வு உண்டாகும். வேலையில் பொறுப்பு உயரும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக தனி மதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
குழப்பங்கள் இனி விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இக்காலத்தில் மனதில் வேறு சிந்தனைகள் வேண்டாம். நட்புகளின் வழியே சில சங்கடங்கள், அவமானங்கள் தோன்ற வாய்ப்புண்டு.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். படிப்பில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்நிலை
நீண்ட நாளாக உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொற்றுநோய், பரம்பரைநோயால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இதுவரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் இனி நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு விலகும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தவர்கள் தொழிலை ஆரம்பித்து லாபம் காண்பீர்கள். சிலருக்கு, திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.
அஸ்தம்; வழக்குகளில் வெற்றி

சந்திரன், புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்தாலும் 6ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் செல்வர். கடந்த காலத்தில் இருந்த சங்கடம் எல்லாம் விலகும். பொருளாதார உயர்வும், காரியத்தில் அனுகூலமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றமும், வழக்குகளில் வெற்றியும் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
சனிபகவான் ஆண்டு முழுதும் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனஉளைச்சல் நீங்கும். வழக்கு, விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். இக்காலத்தில் அதிகபட்ச லாபத்தை அடைய முடியும். உங்கள் கவுரவம் அதிகரிக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு 7ம் இடத்திலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் நிலையில் மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். நட்புகளால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். சிலருக்கு எதிர்பாலினரால் தடுமாற்றம், தடமாற்றம் ஏற்படும். சிலர் வழக்கு விவகாரத்தில் சிக்க வேண்டியதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை தோன்றும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை அஷ்டம ஸ்தான குருவால் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். நினைத்ததை நடத்த முடியாமல் போகும். மனதில் குறை இருந்து கொண்டே இருக்கும். மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி என்ற உங்கள் ஆசை நிறைவேறும். சமூக அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

சூரிய சஞ்சாரம்
பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக 16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும் சூரிய பகவானால் சங்கடங்கள் விலகும். ஜென்ம கேதுவின் பாதிப்பில் இருந்து விடுதலை ஏற்படும். சிக்கல்கள் வம்பு வழக்குகள் போன்றவற்றில் இருந்து மீள்வீர்கள். செல்வாக்கு பலமடங்கு உயரும். அந்தஸ்து அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். முயற்சிகள் வெற்றியாகும்.

பொதுப்பலன்
2024ல் உங்கள் செல்வாக்கு உயரும். கடந்த ஆண்டில் இருந்த சங்கடம் விலகும். ஆற்றல் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

தொழில்
தொழிலில் இருந்த சங்கடம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பத்திர எழுத்தர்கள், கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், வெள்ளி, ஜவுளி, குடிநீர், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவோர் மேன்மையடைவர்.

பணியாளர்கள்
அரசு பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கூடும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரின் விருப்பம் நிறைவேறும். ஊதியம் உயரும். பொறுப்பு அதிகரிக்கும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் தீரும். உடல்நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகப் பணியில் பதவி உயர்வு ஏற்படும். மே 1 முதல் குருபார்வை உண்டாவதால் திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். 7ம் இட ராகு மனதில் சஞ்சலத்தை உண்டாக்குவார் என்பதால் உடன் பழகி வருவோரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் குழப்பம் தோன்றும். கணவன் மனைவிக்குள் பிரச்னை உண்டாகும்.

கல்வி
மனக்காரகனும், வித்யாகாரகனும் உங்களை வழிநடத்துவதால் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

உடல்நிலை
6ம் இடச் சனியால் இதுவரை உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். பரம்பரை நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்
வருமானம் பலவழியிலும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சொத்து மீதிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாவதால் உங்கள் நிலை உயரும். சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவர். பிள்ளைகளின் நிலை உயரும். சிலர் நவீன சாதனம், வாகனம் வாங்குவீர்கள். கோயில் திருப்பணிக்கு நிதியுதவி புரிவீர்கள்.

பரிகாரம்; துர்கைக்கு குங்குமம் சாத்தி, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட வளம் உண்டாகும்.
சித்திரை; காத்திருக்கு ராஜயோகம்

செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தந்தாலும், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

2024 ல் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தும், முயற்சிகளில் வெற்றிகளும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்திக் கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், வழக்குகளில் சாதகமான நிலை, எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4 - டிச 31 வரையிலும் தாரா பலனால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ராஜ யோகபலன்களை வழங்குவார். முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம், செல்வாக்கை அதிகரிப்பார். தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். போட்டியாளர்களை எல்லாம் பின் வாங்க வைப்பார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செயல்களை லாபமாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மைகளை அதிகரிப்பார். போராட்டமான நிலையில் இருந்து விடுதலை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் ஒரு சிலர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொருள் இழப்பும் உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலையும், புதிய முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றி அடையக்கூடிய நிலையும் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பலவழிகளிலும் பணம் வரும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, வரை தன் பார்வையின் மூலம் அதிகபட்சமான யோகத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். பணம், பதவி, பட்டம், செல்வாக்கு என வாழ்வை வளமாக்குவார்.

சூரிய சஞ்சாரம்
பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஜன 1- 14 மற்றும் மார்ச் 14 - ஏப் 13 வரையிலும், ஜூலை 17 - செப் 16 வரையிலும் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்க்கை நிலை உயரும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
2024ல் நினைத்ததை சாதிப்பீர்கள். சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், பணியில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தைரியமாக செயல்பட்டு வருவாயை அதிகரிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

தொழில்
தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழிற்சாலை, தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்
பணியில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பர். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். தனியார் துறை பணியாளர்கள் நிலை உயரும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திறமை மதிக்கப்படும். ஊதியம் உயரும்.

பெண்கள்
தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரிவோருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத்துணை உங்களின் ஆலோசனையின்படி செயல்படும் நிலை உண்டாகும். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது கூடுதல் நன்மை தரும்.

உடல்நிலை
நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் உண்டாகும் என்றாலும் சிகிச்சையால் குணமாகும். நீண்டநாள் நோய்கள் நவீன சிகிச்சையால் குறைய ஆரம்பிக்கும். நடைபயிற்சி, யோகா போன்றவற்றால் நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் சிலர் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். துணிந்து செயல்பட்டு குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பரிகாரம்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசித்து வர நன்மை அதிகரிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement