Load Image
Advertisement

விருச்சிகம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

விசாகம்; விருப்பம் நிறைவேறும்

குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.

2024 ஆண்டில், விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோக காலமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வருமானம் பலவழியிலும் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.

குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் எதிர்பார்த்த வரவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி ஜன 1 - பிப் 15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 மற்றும் நவ 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர நிலைகளிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடத்தில் இருந்து பாதுகாப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்களை வழங்கி வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்கள் தன் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் நிலையில் சங்கடங்களை சந்திக்க நேரும். ஆசைகள் காரணமாக அலைச்சல் உண்டாகும் என்பதால் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரவேண்டும்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மையை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல்நலக்குறைவை போக்குவார். எதிர்ப்பு விலகும். 4ம் பாதத்தினருக்கு 11 ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பட்டம், பதவி, செல்வாக்கு என்று அதிகரிப்பார். பணம் பல வழிகளிலும் வரும். செல்வாக்கு உயரும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஏழாமிடத்திலும், மே 1 முதல் அஷ்டமத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குரு. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் தருவார். புதிய வீடு, வாகனம் என்ற கனவுகளை நினைவாக்குவார். பொன் பொருள் சேர்க்கை தருவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே1 முதல் நினைத்த காரியத்தில் வெற்றி, வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை, கன்னியருக்கு திருமண யோகத்தை தருவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 - 14 மற்றும் மார்ச் 14 - ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - செப்.16 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12 மற்றும் ஏப்.14 - மே 13 வரையிலும் ஆக.17 - அக்.17 வரையிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இக்காலம் யோக காலமாக இருக்கும்.

பொதுப்பலன்
2024ல் ராகு - கேது சஞ்சாரம், குருவின் சஞ்சாரம், 120 நாட்கள் சூரிய பகவானால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

தொழில்
தொழிலில் போட்டிகள் பிரச்னைகள் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் தரும் தொழில்களை மேற்கொள்வீர்கள். முயற்சியனைத்தும் லாபமாகும். உங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் தொழிலில் ஆதாயம் உண்டாகும்.

பணியாளர்கள்
அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய நிர்வாக பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
அரசுப் பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மற்ற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உடல்நிலை
நோயால் சங்கடப்பட்ட நிலை மாறும். குணமாகாது என்று நீங்கள் நினைத்த நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோயால் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பம்
நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். பொன் பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.
அனுஷம்: லாபம் அதிகரிக்கும்

சனியை நட்சத்திர நாதனாகவும், செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட உங்களுக்கு,
2024 வருடத்தில் கேது லாப ஸ்தான சஞ்சாரமும், குருவின் பார்வைகளும் முயற்சி எல்லாம் வெற்றியாக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப பிரச்னை மறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பநலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய சொத்து, வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். உடல்நலனில் கவனம் தேவை. பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாயாரின் உடலில் சில சங்கடம் ஏற்படலாம். சிகிச்சை தேவைப்படும்.

சனி சஞ்சாரம்
மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - ஜன. 31 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை உண்டாகும். உங்கள் வழக்கமான முயற்சி தடை இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்ட காரியங்களில் லாபம் உண்டாகும். பிரச்னைகளை எல்லாம் சமாளிக்கும் சக்தி ஏற்படும். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு பூர்வ புண்ணியத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் லாப ஸ்தான கேதுவால் சங்கடம், நெருக்கடிகள் காணாமல் போகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வசதியான நிலை உண்டாகும். வீடு, வாகனம், பொன், பொருள், அந்தஸ்தை அடைவீர்கள். ராகுவின் சஞ்சார நிலையால் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 6 ல் சஞ்சரிக்கும் குருவால் உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். பணவரவிலும் தடை உண்டாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் சங்கடங்களில் இருந்து தப்ப முடியும். மே 1 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். அலுவலகத்தில் பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

சூரிய சஞ்சாரம்
ஜன 15 - பிப்.12 மற்றும் ஏப்.14 - மே 13 வரையிலும், ஆக. 17 - அக்.17 காலத்திலும் சூரிய பகவானின் 3,6,10,11 ம் இட சஞ்சார நிலைகளால் செல்வாக்கு உயரும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு பணியாளர், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய பொறுப்பு வந்து சேரும்.

பொதுப்பலன்
2024 ல் நான்காமிட சனியால் அலைச்சல் அதிகரித்தாலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ அருளால் செயல்கள் வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்டநாள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் கலைஞர்களுக்கு யோகமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். கடன்கள் அடைபடும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும்.

தொழில்
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய கிளைகள் தொடங்கி வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும் உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசாங்க ரீதியாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், ஓட்டல், விவசாயம், பில்டர்ஸ், கமிஷன் வியாபாரம், இயந்திர தொழிற்சாலைகள், ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள், முதலாளிகள் ஆதரவாக இருப்பர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.

பெண்கள்
குருபகவானின் பார்வைகளாலும், மே 1 முதல் ஏழாமிடத்தில் குரு சஞ்சரிப்பதாலும் வாழ்க்கைத் துணையின் அன்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், சலுகை கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். கணவரை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.

கல்வி
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். விரும்பிய கல்லுாரியில் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்கும்.

உடல்நிலை
உடல்நிலை ஒரு நேரம் இருப்பது போல் மறுநேரம் இல்லாமல் போகும். சிலருக்கு தொற்று நோய், பரம்பரை நோய் என பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரை நாடும் நிலை ஏற்படும். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டியதாக இருக்கும்.

குடும்பம்
அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்றாலும், இக்காலத்தில் ராகு - கேதுவின் சஞ்சாரமும், குருவின் ஸ்தான, பார்வைகளின் பலன்களும் முயற்சிகளை வெற்றியாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும் எதிரி தொல்லை விலகும். தொழில் வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நகை என உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: குச்சனுார் சனீஸ்வரரை தரிசித்து நல்லெண்ணெய் தானம் செய்ய சங்கடம் தீரும்.
கேட்டை; வாழ்வில் முன்னேற்றம்

புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் குருபகவான் பார்வைகளும், மே 1 முதல் குருவின் ஏழாமிட சஞ்சார நிலையும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அருளும், உங்கள் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். சங்கடத்தை எல்லாம் விலக்கி வைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்கி முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் பல வழியிலும் வரும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தாயாரின் உடல் நிலையிலும் சங்கடம் ஏற்படலாம்.

சனி சஞ்சாரம்
அர்த்தாஷ்டமச் சனியாக சனி 4ல் சஞ்சரிக்கும் நிலையில் ஜன 1 - பிப் 15 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படலாம். புதிய பொறுப்பு சிலருக்கு கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் அடைபடாத கடன்களை அடைப்பீர்கள். வழக்குகளில் நெருக்கடி விலகும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய பொறுப்பு, பதவி, அந்தஸ்து என எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமணமாகி வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சங்கடம் உண்டாகும். வீண் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும் என்றாலும், குருவின் பார்வையால் தொழில் வளர்ச்சி ஆகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் பிரச்னை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மே 1 முதல் 7 ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கனவு பூர்த்தியாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். முயற்சி யாவும் வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

சூரிய சஞ்சாரம்
ஜன15 - பிப் 12 மற்றும் ஏப் 14 - மே13 வரையிலும், ஆக.17 - அக்.17வரையிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் பிரகாசமான நிலை உண்டாகும். பிரச்னைகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். அரசுவழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
2024ல் உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற லாபம் உண்டாகும். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். குடும்ப நிலையை உயர்த்தும் முயற்சியை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். வரவேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் இக்காலத்தில் எதிர்பார்த்த நன்மை அடைய முடியும். புதிய பொறுப்பு ஒப்பந்தம் வந்து சேரும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.


தொழில்
சுய தொழில் செய்பவர்களின் முயற்சி வெற்றியாகும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானம் உயரும். ஷேர் மூலம் அதிக அளவு ஆதாயம் உண்டாகும். பப்ளிகேஷன், பத்திரப்பதிவு, விவசாயம், இயந்திர நிறுவனம், ஆன்லைன் வியாபாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
தனியார் துறை பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

பெண்கள்
கல்வி, வேலை, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். நிறைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். அதன் காரணமாக உடல்பாதிப்பு உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு உழைப்பும் முதலீடும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு பலத்தை கொடுக்கும். கணவரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னை இல்லாமல் போகும். முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் திருமணம் நடக்கும்.

கல்வி
படிப்பில் கவனம் செல்லும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீர்கள்.

உடல்நிலை
4ம் இட சனியால் உடல் பாதிப்புண்டாகும். என்றாலும் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலையால் உங்களுக்கு நிவாரணம் உண்டாகும். வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். பரம்பரை நோய், ரகசிய நோயால் சங்கடம் உண்டாக வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

குடும்பம்
கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதாரநிலை உயரும். வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றில் தடைபட்ட முயற்சி வெற்றியாகும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

பரிகாரம்; குலதெய்வத்தை அடிக்கடி வழிபட நன்மைகள் அதிகரிக்கும் சங்கடம் விலகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement