Load Image
Advertisement

கும்பம் : சித்திரை ராசி பலன்

அவிட்டம் 3,4 ம் பாதம்: சர்வ சக்திக்கும் காரகனான சனி, உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் தைரியத்திற்கும் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு துணிச்சலும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகபட்சமாக இருக்கும். எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் நீங்கள். பிறக்கும் சித்திரை மாதம் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடியை நீக்கி வைக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிக்கும் சூரிய பகவான் உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். தடைபட்ட செயல்களை லாபமாக்குவார். அரசு ரீதியிலான முயற்சிகளில் ஆதாயத்தை ஏற்படுத்துவார் என்றாலும், ஜென்ம சனியால் வாழ்க்கைத் துணையுடனும், நட்புகளுடனும் சங்கடம் தோன்றலாம். குழப்பங்கள் உருவாகலாம் என்பதால் கவனமாக செயல்படுவதால் இழப்பு ஏற்படாமல் போகும். அரசியல்வாதிகள் எந்த ஒன்றிலும் அவசரம் காட்டாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதால் விருப்பம் நிறைவேறும். பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். வரவு, செலவுகளில் எச்சரிக்கை வேண்டும். பெண்களுக்கு இந்த மாதம் விருப்பம் நிறைவேறும் மாதமாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதுடன் தங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். போராட்டமான நிலை இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: ஏப். 22,23

அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,18,25,27, மே 8, 9
பரிகாரம்: காளியை வழிபட முயற்சி அனைத்தும் வெற்றியாகும்.

சதயம்: யோகத்திற்கும், போகத்திற்கும் காரகனான ராகு, ஆயுள் காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு உழைப்பின் மீது அதிகமான அக்கறை இருக்கும். எந்த ஒன்றிலும் வெற்றி அடைய வேண்டும் என போராடுவீர்கள். பிறக்கும் சித்திரை மாதத்தில் வழக்கமான செயல்களிலும் நீங்கள் கவனமாக ஈடுபட வேண்டும். உங்கள் நட்சத்திர நாதன் குடும்ப ஸ்தானத்திலும், ராசிநாதன் ஜென்மத்திலும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம், வருவாய் என்று எல்லாவற்றிலும் இழுபறிகள் இருக்கும். போட்டியாளர்களால் நெருக்கடி அதிகரிக்கும். முதலீடு தேக்கமடையும். பணியாளர்கள் இந்த மாதம் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடையலாம். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் மாதம் முழுவதும் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அரசு விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக செயல்படுவார்கள் என்பதால் விழிப்புணர்வு அவசியம். உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணை, நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வதால் சுமூகமான நிலை நீடிக்கும். இல்லையெனில் பிரச்னைகள் உருவாகலாம். பெண்கள் இந்த மாதம் நிதானமாக செயல்பட வேண்டும். அவசரப்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உடல் நிலையிலும், வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் கவனம் வேண்டும். குலதெய்வ வழிபாட்டால் நெருக்கடி விலகி நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருந்தாலும் தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகள் தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் மேற்படிப்பிற்குரிய முயற்சியில் அக்கறை செலுத்துவர்.
சந்திராஷ்டமம்: ஏப்.23,24
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,22,26, மே 4,8
பரிகாரம்: மூகாம்பிகையை மனதில் நினைத்து வழிபட்டால் நன்மை பெருகும்.

பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: தனகாரகன், ஞானக்காரகனான குரு, ஆயுள் காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட்டு வெற்றி அடையும் திறன் இருக்கும். சமூகத்தில் மரியாதை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் பிற்பகுதியில் 4 ம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால் அவருடைய பார்வைகள் உங்களுக்கிருந்த சங்கடங்களை விலக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உடல் நலக்குறைவு அகலும். விரயங்கள் கட்டுப்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சூரியன் 3 ல் உச்சம் பெறுவதால் முயற்சிகள் வெற்றியாகும். லாபநிலை உண்டாகும். அதே நேரத்தில் ஜென்ம சனியும், வாக்கு ஸ்தான ராகுவும், அஷ்டம ஸ்தான கேதுவும் சஞ்சரிப்பதை மனதில் கொண்டு விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்கள் குறையும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் தள்ளி வைப்பது நல்லது. வழக்கமான செயல்களில் மட்டும் ஈடுபடுவதால் இழப்பு குறையும். வியாபாரம், தொழிலில் இக்காலத்தில் கவனம் அவசியம். உத்தியோகம், பார்த்துவரும் பணிகளில் விழிப்புணர்வு தேவை. பெண்களுக்கு வெற்றியும் சங்கடமும் கலந்த மாதமாக இருக்கும். நிதானமாக செயல்பட்டால் நன்மை அடையலாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் குறையும். யாரிடமும் கோபதாபம், அந்தரங்க ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். அதனால் பிரச்னைகள் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள் என்பதால் விழிப்புணர்வு அவசியம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வரும். விவசாயிகள் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை யோசித்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: ஏப்.24
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30,மே 3,8,12
பரிகாரம்: வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வு வளமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement