Load Image
Advertisement

கன்னி : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

உத்திரம்: நினைத்தது நிறைவேறும்

சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியன் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (கன்னி) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் குரு 10 ல் சஞ்சரித்து, உழைப்பிற்கேற்ற லாபம், முயற்சிக்கேற்ற வெற்றி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகம், திடீர் அதிர்ஷ்டம், வெற்றி, பதவி, யாத்திரை செல்லும் பாக்கியம் தருவார்.

பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களில் பதிவதால் குடும்பத்தில் நிம்மதி, எதிர்பார்த்த வரவு உண்டாகும். வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். உடல் பாதிப்புகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைபட்ட செயல்கள் வெற்றியாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களின் மீது குருபார்வை படுவதால் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும், பூர்வீகச் சொத்தில் பிரச்னை மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும்.

சனி சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தான சனியால் வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத் தடை, தம்பதியருக்குள் சச்சரவு, உடல்பாதிப்பு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். சங்கடம் விலகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2ல் சஞ்சரிக்கும் கேதுவால் குடும்ப குழப்பம், நிம்மதியற்ற நிலை உண்டாகும். வரவு தடைபடும். 8ம் இட ராகுவால் செல்வாக்கு, அந்தஸ்திற்கு சோதனை உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7 ம் இட ராகுவால் எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் சங்கடம் தோன்றும்.
சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூலை 16, அக்.18 – நவ.15, 2025, ஜன.14 – மாரச்14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ.16 – டிச.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முயற்சி வெற்றி பெறும். வேலையில் பதவி உயர்வு, விரும்பிய மாற்றம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியால் வருமானம் உயரும்.

பொதுப்பலன்: 1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும், 6 ம் இட சனியும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் 4 பாதத்தினருக்கும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். பொருளாதார வளர்ச்சி தோன்றும். பணம் பலவழியில் வரும். தொழில் வழியாக வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.

தொழில் : தொழிலில் தடை விலகும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். விற்பனை அதிகரிக்கும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி மாறும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு வரும். விரும்பிய இட மாற்றம் ஏற்படும்.
பெண்கள்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளால் குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடலில் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி : பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உடலில் இருந்த பாதிப்பு விலகும். சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், நரம்பு என்று ஏதாவது ஒரு பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளான உங்களுக்கு இனி நிவாரணம் கிடைக்கும்.
குடும்பம்: ரிஷப குருவால் சங்கடம் தீரும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பணவரவால் சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பரிகாரம்: தினமும் காலையில் குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.
அஸ்தம்: குருபார்வையால் குறையில்லை

சந்திரனை நட்சத்திராதிபதியாகவும், புதனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் அறிவும், செயல் திறன் கொண்டவராக இருப்பீர்கள். குருபகவான் மே1 முதல் பாக்ய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு உயரும். நினைத்ததை சாதிப்பதுடன், எதிர்பார்த்ததை அடையும் நிலை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத வெற்றி ஏற்படும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும்.

பார்வைகளின் பலன்: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் 5 ம் பார்வை ராசிக்கு உண்டாவதால் புதிய சக்தி கிடைத்தது போல் உணர்வீர்கள். செல்வாக்கு உயரும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 3ல் விழுவதால் முயற்சி வெற்றி பெறும். துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குருவின் 9 ம் பார்வை 5 ம் இடத்திற்கு உண்டாவதால் பூர்வீகச் சொத்தில் பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குருவின் பார்வையால் குறையனைத்தும் தீரும்.

சனி சஞ்சாரம்: 6ல் சஞ்சரிக்கும் சனி அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். உடல் பாதிப்புகளை அகற்றுவார். வழக்கு விவகாரத்தில் வெற்றி தருவார். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். செல்வாக்கு உயரும். எதிரிகள் சரணடைவர். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
ராகு, கேது சஞ்சாரம்: ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். வீண் சிந்தனை மேலோங்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7மிட ராகுவால் ஆசை அதிகரிக்கும். எதிர்பாலினரின் வலையில் சிக்கலாம். இழப்பு, சங்கடம் தோன்றும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் சங்கடம் உண்டாகும். நண்பர்கள் விலகிச் செல்வர்.
சூரிய சஞ்சாரம் : ஜூன்15 –ஆக.16, நவ.16 – டிச.15, 2025, பிப்.13 –மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முயற்சி வெற்றி பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் தருவார். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முயற்சி வெற்றி பெறும். லாபம் அதிகரிக்கும்.

பொதுப்பலன் : பாக்ய ஸ்தான குருவால் செல்வாக்கு, சொல்வாக்கு உண்டாகும். நினைத்தது நடந்தேறும். குரு பார்வைகளும், 6ம் இட சனியும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்கள், கலைஞர்களின் நிலை உயரும்.

தொழில் : முதலீடு செய்தும் முன்னேற்றமில்லை. முயற்சிகள் செய்தும் ஆதாயமில்லை என்ற நிலை இனி மாறும். புதிய உத்திகளால் தொழிலை விரிவு செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்
பணியாளர்கள்: அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி மாறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திறமைக்கேற்ற பொறுப்பு உண்டாகும்.
பெண்கள்: செல்வாக்கு வெளிப்படும். கணவருடன் இருந்த சச்சரவு நீங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி : உங்கள் ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: நெஞ்சுவலி, வயிற்றுவலி, உடல் பலவீனம், சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர் என ஏதாவது ஒரு பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளாகலாம். ஆனால் சிகிச்சையால் குணமடைவீர்கள். உடல்நிலை சீராகும்.
குடும்பம்: பணவரவு அதிகரிக்கும். உறவினர் உங்களைத் தேடி வருவர். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குலதெய்வ அருளால் குடும்பத்தில் குறை தீரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பரிகாரம் : செவ்வாய், வெள்ளிக்கிழமையன்று விஷ்ணு துர்கையை வழிபடுங்கள்.

சித்திரை: குருவருளால் நன்மை

செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (கன்னி) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். நட்பு கிரகமான குரு, 9ம் வீட்டில் சஞ்சரித்து சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம், யோகம், செல்வாக்கை வழங்குவார். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 8ல் சஞ்சரித்து தடை, உடல்பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத இடமாற்றத்தை அளிப்பார்.

பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் அவரது 5,7,9 ம் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குலதெய்வ அருள் கிட்டும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். 3,4ம் பாதத்தினருக்கு 2,4,12 ம் இடங்களின் மீது குருவின் பார்வை பதிவதால் பணவரவு திருப்தி தரும். வீடு கட்டி குடியேறும் நிலை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சுபச்செலவு ஏற்படும். குருவருளால் நன்மை அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியால் அதிர்ஷ்டம் உண்டாகும். வழக்கு விவகாரம் வெற்றி பெறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 3,4ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், சொத்தில் பிரச்னை, வழக்கில் தடை உருவாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7ல் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். சிலர் எதிர்பாலினரின் வலையில் சிக்க நேரிடும். தம்பதிக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நிலை சீராகும். 12 ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
சூரிய சஞ்சாரம் : 1,2ம் பாதத்தினருக்கு ஜூன் 15 –ஆக.16, நவ.16 – டிச.15, 2025, பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் சங்கடம் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். அரசுவழி முயற்சி ஆதாயம் தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

பொதுப்பலன் : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

தொழில் : தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முதலீட்டில் லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வரும்.
பெண்கள்: வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். உடல் பாதிப்பு நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி : 1,2 ம் பாதத்தினருக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மேற்கல்வி முயற்சி அலைச்சலைக் கொடுக்கும். விடாமுயற்சியால் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.
உடல்நிலை: 1,2 ம் பாதத்தினருக்கு 6ம் இட சனியாலும், 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவாலும் பாதிப்பு சற்று விலக ஆரம்பிக்கும். நெஞ்சுவலி, வயிற்றுவலி, சிறுநீரகக் கோளாறு, சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், அல்சர், மன அழுத்தம் என அல்லல்பட்ட நீங்கள் குணமடைவீர்கள்.
குடும்பம்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், ராகு, சனி சஞ்சாரங்களும் நான்கு பாதத்தினருக்கும் நன்மையளிக்கும். பணவரவில் திருப்தியுண்டாகும். பூமி, வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: தினமும் காலையில் நீராடி சூரியனை வழிபட அல்லல் தீரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement