Load Image
Advertisement

துலாம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

சித்திரை: குருவருளால் நன்மை

செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (கன்னி) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். நட்பு கிரகமான குரு, 9ம் வீட்டில் சஞ்சரித்து சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம், யோகம், செல்வாக்கை வழங்குவார். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 8ல் சஞ்சரித்து தடை, உடல்பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத இடமாற்றத்தை அளிப்பார்.

பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் அவரது 5,7,9 ம் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குலதெய்வ அருள் கிட்டும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். 3,4ம் பாதத்தினருக்கு 2,4,12 ம் இடங்களின் மீது குருவின் பார்வை பதிவதால் பணவரவு திருப்தி தரும். வீடு கட்டி குடியேறும் நிலை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சுபச்செலவு ஏற்படும். குருவருளால் நன்மை அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியால் அதிர்ஷ்டம் உண்டாகும். வழக்கு விவகாரம் வெற்றி பெறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 3,4ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், சொத்தில் பிரச்னை, வழக்கில் தடை உருவாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7ல் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். சிலர் எதிர்பாலினரின் வலையில் சிக்க நேரிடும். தம்பதிக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நிலை சீராகும். 12 ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
சூரிய சஞ்சாரம் : 1,2ம் பாதத்தினருக்கு ஜூன் 15 –ஆக.16, நவ.16 – டிச.15, 2025, பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் சங்கடம் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். அரசுவழி முயற்சி ஆதாயம் தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

பொதுப்பலன் : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

தொழில் : தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முதலீட்டில் லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வரும்.
பெண்கள்: வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். உடல் பாதிப்பு நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி : 1,2 ம் பாதத்தினருக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மேற்கல்வி முயற்சி அலைச்சலைக் கொடுக்கும். விடாமுயற்சியால் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.
உடல்நிலை: 1,2 ம் பாதத்தினருக்கு 6ம் இட சனியாலும், 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவாலும் பாதிப்பு சற்று விலக ஆரம்பிக்கும். நெஞ்சுவலி, வயிற்றுவலி, சிறுநீரகக் கோளாறு, சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், அல்சர், மன அழுத்தம் என அல்லல்பட்ட நீங்கள் குணமடைவீர்கள்.
குடும்பம்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், ராகு, சனி சஞ்சாரங்களும் நான்கு பாதத்தினருக்கும் நன்மையளிக்கும். பணவரவில் திருப்தியுண்டாகும். பூமி, வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: தினமும் காலையில் நீராடி சூரியனை வழிபட அல்லல் தீரும்.
சுவாதி: அஷ்டம குருவிலும் அதிர்ஷ்டம்

ராகுவை நட்சத்திராதிபதியாகவும், சுக்கிரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் துடிப்புடன் செயல்படக் கூடியவர். தனக்காரகனான குரு, மே1 முதல் ராசிக்கு 8ல் சஞ்சரிக்கிறார். குரு ராசிக்கு 3, 6 ம் இடத்திற்கு உரியவர். அந்த இரண்டும் மறைவு ஸ்தானம் என்ற நிலையில் இப்போது அவர் சஞ்சரிக்கும் 8ம் இடமும் மறைவு ஸ்தானமே. முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றினாலும் விரைவில் குணமடைவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டாலும் நன்மை உண்டாகும்.

பார்வைகளின் பலன்: அஷ்டம குருவின் 5ம் பார்வை உங்கள் ராசிக்கு 12ல் பதிவதால் செலவு அதிகரிக்கும். அசையா சொத்து வாங்குவீர்கள். பணியாளர்கள் சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வர். குருவின் 7 ம் பார்வை ராசிக்கு 2ல் பதிவதால் பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ல் பதிவதால் ஆரோக்கியம் மேம்படும். வாகனம், சொத்து வாங்குவீர்கள்.

சனி சஞ்சாரம்: 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, சங்கடம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் அதிருப்தி தரும். பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். உயர்கல்வி முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 6 ம் இட ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும். நினைத்ததை நினைத்தபடி செய்வீர்கள். வழக்குகள் முடிவிற்கு வரும். 12ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். அசையா சொத்து வாங்குவீர்கள். கல்வி, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி ஜெயமாகும்.
சூரிய சஞ்சாரம் : ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச் 15 – ஏப்.13 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய மாற்றத்தை வழங்குவார். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.

பொதுப்பலன் : குருவின் பார்வைகள், 6ம் இட ராகுவும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உயர்வை உண்டாக்குவர். புதிய சொத்து வாங்குவீர்கள். பொருளாதாரம் கூடும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வரும்.

தொழில் : தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள். சிலர் புதிய கிளை தொடங்குவர். உற்பத்தி அதிகரிப்பால் அதிகபட்ச லாபம் தோன்றும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கு மதிப்புமில்லை என்ற சங்கட நிலை மாறும். உங்கள் திறமைக்கு முதலாளி மதிப்பளிப்பார். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு நெருக்கடி நீங்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.
பெண்கள்: குருபார்வையும், ராகுவின் சஞ்சாரமும் முன்னேற்றம் தரும். ஆரோக்கியம் உண்டாகும். மேற்கல்வி முயற்சி வெற்றி தரும். வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி: குருவின் பார்வை வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் பொதுத் தேர்விலும் போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: நெஞ்சுவலி, வயிற்றுவலி, ஜீரனக்கோளாறு, சிறுநீரகப் பிரச்னை, உடல் பலவீனம், சுவாசப் பிரச்னை, அல்சர், மன அழுத்தம் என பாதிப்புக்கு ஆளான நீங்கள் அவற்றில் இருந்து குணமடைவீர்கள்.
குடும்பம்: குருவின் பார்வை தன, சுக ஸ்தானத்திற்கு உண்டாவதால் வருமானம் உயரும். சொத்து, பொன் பொருள் சேரும். விரும்பிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட்டு வர இன்னல்கள் விலகும்.
விசாகம்: தொட்டது துலங்கும்

குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே1 முதல் குரு 8ல் சஞ்சரித்து முயற்சிக்கேற்ற முன்னேற்றம் தருவார். உடல் பாதிப்பு மறையும். இடமாற்றத்தை உண்டாக்கி ஏற்றம் தருவார். 4ம் பாதத்தினருக்கு 7ல் சஞ்சரிப்பதால் சங்கடம் தீரும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 8ல் சஞ்சரித்தாலும் குருவின் 5,7,9 ம் பார்வைகளால் அசையா சொத்து சேரும். பணியாளர்கள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை சிலருக்கு அமையும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 3,11ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.

சனி சஞ்சாரம்: 1,2,3ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, சங்கடம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் அதிருப்தி தரும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை, வழக்கு ஏற்படும். 4ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் சனியால் வாகனம், சொத்து, சுகம் என நன்மை நடந்தாலும் உடல் உபாதை ஏற்படும். சனியின் 10ம் பார்வை ராசிக்கு உண்டாவதால் சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் மே 1 முதல் குருபார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களுக்குள் புதிய சக்தி தோன்றும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3, ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு முடிவிற்கு வரும். 12ம் இட கேதுவால் செலவு அதிகமாகும். சொத்து வாங்குவீர்கள். 4ம் பாதத்தினருக்கு 5 ம் இட ராகுவால் பிள்ளைகளால் கவலை உண்டாகும். சொத்தில் வில்லங்கம், வழக்கு ஏற்படும். 11ம் இட கேதுவால் வருமானம் அதிகரிக்கும். மேற்கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும்.
சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே13, ஆக.17 – அக்.17, 2025, ஜன.14 – பிப்.12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம் முன்னேற்றம் தரும். வியாபாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்களின் நிலை உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பொதுப்பலன் : 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 6ம் இட ராகுவும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், 11ம் இட கேதுவும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வர். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி தோன்றும்.

தொழில் : தொழிலில் தடை, முயற்சி கை கூடாத நிலை என்ற நிலை மாறி நன்மை உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். புதிய வாடிக்கையாளர் ஆதரவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வெளியூரில் புதிய கிளை தொடங்குவர்.
பணியாளர்கள்: திறமை வெளிப்படும். வேலையில் முன்னேற்றம், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.
பெண்கள்: யோக காலமாக இருக்கும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி : பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சரியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை செய்து கொள்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
குடும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட முயற்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து, பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடக்கும்.

பரிகாரம்: பழநி முருகனை தினமும் வழிபட்டால் வாழ்வு வளமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement