Load Image
Advertisement

தனுசு : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

மூலம்: குடும்பத்தில் குதுாகலம்

கேது பகவானை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் மதி நுட்பத்தால் எதிர்ப்பை சமாளிக்கும் ஆற்றலும், சாதுரிய பேச்சால் எதிரியையும் நண்பராக்கும் திறனும் பெற்றவர்கள். இதுவரை ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான் மே 1 முதல் ராசிக்கு 6ல் சஞ்சரித்து பலன் தரப் போகிறார். 6 ம் இடம் என்பது மறைவு ஸ்தானம். ராசிநாதன் மறைந்தால் நற்பலன் கிடைக்காது. அதே நேரத்தில் அஸ்தமனம், வக்கிர காலத்தில் நற்பலன் தருவார்.

பார்வைகளின் பலன்: குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 2,10,12, ம் இடங்களுக்கு உண்டாவதால் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். சுபச்செலவு ஏற்படும். சிலர் புதிய சொத்து வாங்குவர். வசிக்கும் இடத்தை ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள்.

சனி சஞ்சாரம் : 3ல்சனி முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நடக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை வழங்குவார். சொத்து சேரும். தடைபட்ட செயல்களை தொடர வைப்பார். ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிலை உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 4 ம் இட ராகுவால் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல்நிலை ஒருநேரம் போல் மறுநேரம் இருக்காது. குடும்பத்தில் பிரச்னை வரும். எடுத்த செயலை முடிக்க முடியாமல் போகும். 10ல் சஞ்சரிக்கும் கேதுவால் தொழிலில் தடைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பாராத மாற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறையும்.
சூரிய சஞ்சாரம் : மே 14 – ஜூன் 14, செப்.17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சாரத்தால் நெருக்கடி விலகும். தொழில், பணியில் வளர்ச்சி ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல் பாதிப்பு விலகும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

பொதுப்பலன் : குருவின் பார்வைகள், 3 ம் இட சனி, 120 நாட்கள் சூரியன், 90 நாட்கள் செவ்வாயின் சஞ்சாரத்தால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். புதிய தொழிலில் லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடக்கும்.

தொழில் : தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை, தொழில்காரகன் சனி முயற்சி ஸ்தானத்தில், 10ல் கேது என மூன்றும் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு தொடர்பு மூலம் லாபம் வரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பணியாளர்கள் : ஜீவனம் பலம் அடைவதுடன், சனி சாதகமாக இருப்பதால் உங்கள் நிலை உயரும். வேலை நிரந்தரமாகும். புதிய பொறுப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், எதிர்பார்த்த பணி உயர்வு உண்டாகும்.
பெண்கள்: ஆறாமிட குருவால் எதிரியின் கை மேலோங்கும், உடலில் சங்கடம் தலையெடுக்கும் என்றாலும் குருவின் பார்வை, சனி சஞ்சாரம் முன்னேற்றம் தரும். உடல் உபாதை விலகும். தைரியம் கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும், பணியில் புதிய பொறுப்பும் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கணவரின் ஆதரவால் பொன், பொருள் சேரும்.
கல்வி : குருபார்வை வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாட்டுக்குச் செல்வர்.
உடல்நிலை: ஆறாமிட குருவால் உடல்நலக்குறைவு ஏற்படும். சுவாசப் பிரச்னை, சிறுநீரக கோளாறு, மூட்டுவலி, கர்ப்பப்பை கோளாறு என பாதிப்பு உண்டாகும் என்றாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடும்பம் : குருவின் பார்வை 2ல் விழுவதால் உண்டாவதால் குடும்ப பிரச்னை தீரும். பணவரவால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். சொத்து சேரும். நவீன பொருள் வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வீடு அமையும். தம்பதியர் நல்ல புரிதலுடன் செயல்படுவர். சுபநிகழ்ச்சியும், பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும்.

பரிகாரம்: வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டால் வாழ்வு செழிக்கும்.

பூராடம்: அமோக லாபம்

சுக்கிர பகவானை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் துணிச்சல் மிக்கவராகவும், ஆழ்ந்து சிந்திப்பவராகவும், பிறருக்கு வழிகாட்டியாகவும் வாழ்பவர்கள். இதுவரை 5ல் சஞ்சரித்த குரு, மே 1 முதல் மறைவு இடமான 6ல் சஞ்சரிக்க இருக்கிறார். அவரால் நன்மை தர முடியாவிட்டாலும் அஸ்தமனம், வக்கிரம் அடையும் காலத்தில் நற்பலன் வழங்குவார்.

பார்வைகளின் பலன்: குருவின் பார்வைக்கு பலம் அதிகம். 6 ல் இருக்கும் குரு 5,7,9 ம் பார்வையால் ராசிக்கு 2,10,12 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பம் விலகும். பணவரவும், பொருள் வரவும், புகழும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். சிலர் சொத்து வாங்குவர். செலவு அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம் : 3ம் இடத்தில் சனி சஞ்சரிக்கிறார். பாப கிரகங்கள் 3ல் சஞ்சரிக்கும்போது முன்னேற்றமான பலன்களை தருவர். மூன்றாம் இட சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ராகு, கேது சஞ்சாரம்: 4ம் இட ராகுவால் ஆசை அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தோன்றும். எடுத்த செயலை முடிக்க முடியாத அளவிற்கு சிந்தனை சிதறும். 10ம் இட கேதுவால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் எதிரும் புதிருமான நிலை ஏற்படும்.
சூரிய சஞ்சாரம் : மே 14 – ஜூன் 14, செப்.17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சார காலத்தில் நெருக்கடி நீங்கும், முயற்சி யாவும் வெற்றியாகும். வியாபாரம், தொழில், வேலையில் உயர்வு தோன்றும். வம்பு, வழக்கு விவகாரம் சாதகமாகும்.

பொதுப்பலன் : ஆறாமிட குருவின் பார்வைகள், தன, குடும்பம், தொழில், விரய ஸ்தானத்திற்கும் உண்டாகிறது. சனி முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சூரியன் 120 நாட்கள், செவ்வாய் 90 நாட்கள் என கிரகங்களின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். சுபநிகழ்ச்சி நடக்கும்.

தொழில் : தொழில்காரகன் சனி 3ல் சஞ்சரிக்கும் நிலையில், தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதும், அங்கு கேதுவும் சஞ்சரித்து வருவதால் தொழிலில் அமோக லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். இழுபறியாக இருந்த வெளிநாட்டு முயற்சி முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் : வேலையில் முன்னேற்றம் உண்டாகும். ஊதியம் உயரும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசு பணியாளர்களுக்கு சங்கடம் விலகும். விரும்பிய மாற்றம், எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் பாதிப்பு நீங்கும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.
கல்வி : படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பமான பாடத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: சுவாசப் பிரச்னை, சிறுநீரக கோளாறு, மூட்டுவலி, கர்ப்பப்பை கோளாறு, அலர்ஜி என ஏதாவது பாதிப்பு உண்டாகலாம் என்றாலும் சிகிச்சையால் குணமடைவீர்கள்.
குடும்பம் : குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு அமையும். தம்பதி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். சுபநிகழ்ச்சி நடைபெறும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

பரிகாரம் : விஷ்ணுவை வழிபட முயற்சிகள் வெற்றியாகும்.
உத்திராடம்: போட்டியில் வெற்றி

சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தினருக்கு (தனுசு) குரு ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (மகரம்) சனி ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு மே 1 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குருவால் நற்பலன் தர முடியாது. எதிரி தொல்லை, உடல் சங்கடம் ஏற்படலாம். 2,3,4 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து பூர்வ புண்ணிய பலன் வழங்குவார். பிரச்னை மறையும்.

பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குரு 6ல் சஞ்சரித்தாலும் அவரது 5,7,9ம் பார்வைகளால் முன்னேற்றத்தை தருவார். பணவரவு கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 9,11ம் இடங்களை குரு பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும்.

சனி சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரிக்கும் சனியால் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பம் தோன்றும். ராசிக்கு குருபார்வை உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு 4ம் இட ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். உடல்நிலையும் ஒருநேரம் மறுநேரம் இருக்காது. 10ம் இட கேதுவால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். 9ம் இட கேதுவால் தெய்வ அருள் உண்டாகும்.
சூரிய சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூன் 14, செப். 17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2025, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடி தீரும். தொழில், வேலையில் உயர்வு உண்டாகும். வழக்கில் சாதக நிலை உண்டாகும்.

பொதுப்பலன் : 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும் 3ம் இட சனியும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், 3 ம் இட ராகுவும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் உங்கள் வாழ்வில் வளத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
தொழில் : சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த செயல்கள் வெற்றியடையும்.
பணியாளர்கள் : நெருக்கடி விலகும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசு பணியாளர்களுக்கு பாதிப்பு விலகும். விரும்பிய இடமாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும்.
பெண்கள்: விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். உடல் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர்.
கல்வி : படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டிகளில் மாணவர்கள் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை : உடல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பரம்பரை நோய், தொற்றுநோய் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். யோகா, தியானம், நடைபயிற்சி நன்மையளிக்கும்.
குடும்பம் : குடும்ப பிரச்னை விலகும். வெளிநபரால் வந்த குழப்பம் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு உயரும். சொத்து சேரும். சிலருக்கு புதிய வீடு அமையும். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பரிகாரம் : சிவன், விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் மறையும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement