Load Image
Advertisement

விருச்சிகம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

விசாகம்: தொட்டது துலங்கும்

குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே1 முதல் குரு 8ல் சஞ்சரித்து முயற்சிக்கேற்ற முன்னேற்றம் தருவார். உடல் பாதிப்பு மறையும். இடமாற்றத்தை உண்டாக்கி ஏற்றம் தருவார். 4ம் பாதத்தினருக்கு 7ல் சஞ்சரிப்பதால் சங்கடம் தீரும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 8ல் சஞ்சரித்தாலும் குருவின் 5,7,9 ம் பார்வைகளால் அசையா சொத்து சேரும். பணியாளர்கள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை சிலருக்கு அமையும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 3,11ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.

சனி சஞ்சாரம்: 1,2,3ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, சங்கடம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் அதிருப்தி தரும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை, வழக்கு ஏற்படும். 4ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் சனியால் வாகனம், சொத்து, சுகம் என நன்மை நடந்தாலும் உடல் உபாதை ஏற்படும். சனியின் 10ம் பார்வை ராசிக்கு உண்டாவதால் சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் மே 1 முதல் குருபார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களுக்குள் புதிய சக்தி தோன்றும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3, ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு முடிவிற்கு வரும். 12ம் இட கேதுவால் செலவு அதிகமாகும். சொத்து வாங்குவீர்கள். 4ம் பாதத்தினருக்கு 5 ம் இட ராகுவால் பிள்ளைகளால் கவலை உண்டாகும். சொத்தில் வில்லங்கம், வழக்கு ஏற்படும். 11ம் இட கேதுவால் வருமானம் அதிகரிக்கும். மேற்கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும்.
சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே13, ஆக.17 – அக்.17, 2025, ஜன.14 – பிப்.12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம் முன்னேற்றம் தரும். வியாபாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்களின் நிலை உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பொதுப்பலன் : 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 6ம் இட ராகுவும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், 11ம் இட கேதுவும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வர். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி தோன்றும்.

தொழில் : தொழிலில் தடை, முயற்சி கை கூடாத நிலை என்ற நிலை மாறி நன்மை உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். புதிய வாடிக்கையாளர் ஆதரவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வெளியூரில் புதிய கிளை தொடங்குவர்.
பணியாளர்கள்: திறமை வெளிப்படும். வேலையில் முன்னேற்றம், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.
பெண்கள்: யோக காலமாக இருக்கும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி : பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சரியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை செய்து கொள்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
குடும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட முயற்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து, பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடக்கும்.

பரிகாரம்: பழநி முருகனை தினமும் வழிபட்டால் வாழ்வு வளமாகும்.
அனுஷம்: யோகமான காலம்

சனி நட்சத்திராதிபதியாகவும், செவ்வாய் ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவராக இருந்தாலும் அவ்வப்போது அதிரடியாகவும் செயல்படுவீர்கள். இதுவரை ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு மே1 முதல் ராசிக்கு 7 ல் சஞ்சரித்து சங்கடங்களை தீர்ப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவார். விற்காததை விற்க வைப்பார். வாங்க நினைத்ததை வாங்க வைப்பார். யோகமான காலமாக அமையும். குலதெய்வ அருள் சேரும். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பார்வைகளின் பலன்: 7ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் ஜென்ம ராசி, 3,11ம் இடங்களுக்கு உண்டாவதால் இனி உடல், மனதில் உற்சாகம் தோன்றும். ஆரோக்கியம் மேம்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். முடங்கிய தொழில் முன்னேற்றமடையும். துணிச்சல் அதிகரிக்கும். தைரியமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்: சனி 4ல் சஞ்சரிப்பதால் வாகனம், சொத்து, வசதி வாய்ப்பு பெருகும். மனம் சுகம், சந்தோஷத்தை தேடும். அலைச்சல், வேலைப்பளு, காலம் கடந்த உணவு, உறக்கத்தால் உடல் நலக்குறைவு உண்டாகும் என்றாலும் குருவின் பார்வை ராசியில் படுவதால் பாதிப்பு குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: 5ம் இட ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி, சலசலப்பு ஏற்படும். பிள்ளைகளால் கவலை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து, நிலப்பிரச்னை உருவாகும். 11 ம் இட கேதுவால் பொருளாதாரம் உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முயற்சி வெற்றி பெறும். வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும்.
சூரிய சஞ்சாரம் : ஏப்.14 – மே 13, ஆக.17 – அக்.17, 2025, ஜன. 14 – பிப். 12 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் ஆதாயம் தோன்றும். வியாபாரம், தொழில், வேலையில் உயர்வு ஏற்படும். விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும்.

பொதுப்பலன் : குரு பார்த்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். தேவை யாவும் நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். அந்தஸ்தும் அதிகாரமும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டது கிடைக்கும். உடல்பாதிப்பு நீங்கும்.

தொழில் : உங்களுக்கு சுபிட்ச காலம் என்பதால் தொழில் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விரிவு செய்வர். வெளியூர், வெளி மாநிலங்களில் கால் பதிப்பீர்கள்.
பணியாளர்கள்: வேலையில் பிரச்னை, குடும்பம் ஒரிடம் வேலை ஓரிடம் என்ற நிலை மாறும். வேலை நிரந்தரமாகும். புதிய பொறுப்பு, உழைப்பிற்கேற்ற சம்பளம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி நீங்கும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.
பெண்கள்: குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமையும், குழந்தை பாக்கியமும் உண்டாகும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.
கல்வி : 7 ம் இட குருவால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என்று மேற்கல்விக்காக செல்வீர்கள்.
உடல்நிலை: உடல் பாதிப்பு குருவின் பார்வையால் விலகும். நீண்ட கால நோய் பாதிப்பு குறையும் அல்லது முற்றிலும் குணமாகும். சித்தா, யோகா, பாரம்பரிய முறைகளால் ஆரோக்கியம் சீராகும்.
குடும்பம்: ஏழாமிட குருவால் குடும்ப சங்கடம் விலகும். பொன் பொருளுடன் சொத்தும் சேரும். சிலர் புதிய வீடு கட்டி பால் காய்ச்சுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வர அதிர்ஷ்டம் உண்டாகும்.
கேட்டை: நினைத்தது நிறைவேறும்

புதனை நட்சத்திராதிபதியாகவும், செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ராசிக்கு 6 ல் சஞ்சரித்த குரு பகவான் மே 1 முதல் 7ல் சஞ்சரித்து பலன் தரப் போகிறார். நினைத்தது நிறைவேறும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பார்வைகளின் பலன்: 7 ல் சஞ்சரிக்கும் குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசி, 3,11 ம் இடங்களுக்கும் உண்டாவதால் குலதெய்வம், குருவருள் உண்டாகும். இரவுக்குப் பின் பகல் என்பது போல் இனி உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகும். இதுவரை இருந்த சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும். கடன் அடைபடும். சேமிப்பு உயரும். உடல், மனதில் உற்சாகம் தோன்றும். திருமண வயதினருக்கு வரன் வரும். நினைத்தது நிறைவேறும்

சனி சஞ்சாரம் : 4ல் சஞ்சரிக்கும் சனி, வாகனம், சொத்து, சுகத்தை வழங்குவார். அதே நேரத்தில் உழைப்பையும் அதிகரிப்பார். அலைச்சல், வேலைப்பளு, காலம் கடந்த உணவு உறக்கம் என்ற நிலைக்கு ஆளாவீர்கள். உடல் நிலையில் சங்கடம் ஏற்படும் என்றாலும் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் 4ம் இட சனியால் உண்டாகும் பாதிப்பு தாமரை இலை நீராக விலகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 5ம் இட ராகுவால் உறவு பகையாகும். குடும்பத்தில் நெருக்கடி, சலசலப்பு தோன்றும். சிலருக்கு பிள்ளைகளால் கவலை அதிகரிக்கும். பரம்பரை சொத்தில் பிரச்னை தலையெடுக்கும். வம்பு வழக்கு என்ற நிலை ஏற்படும். 11ம் இட கேதுவால் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வருமானம் பலவழியிலும் வரும்.
சூரிய சஞ்சாரம் : ஏப். 14 –மே 13, ஆக.17 –அக்.17, 2025, ஜன.14 –பிப்.12 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் உங்கள் நிலையில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சியில் வெற்றியை வழங்குவார். வியாபாரம், தொழில், வேலையில் உயர்வை உண்டாக்குவார். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி வழங்குவார். ஆரோக்கியத்தில் மேம்பாடு அளிப்பார்.

பொதுப்பலன் : குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதால் பொன்னவனின் பார்வையால் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். நிறைவேறாத முயற்சியும் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றமடையும்.

தொழில் : பணியாளர்களால் பிரச்னை, விற்பனையில் தடை, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டியையும் கட்ட முடியாமல் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். சுற்றாத சக்கரங்கள் சுற்றும். ஓடாத இயந்திரங்கள் ஓடும். தொழில் வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் : வேலையில் திருப்தியில்லா நிலை. என்னதான் உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை, மதிப்புமில்லை என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். பார்த்து வரும் வேலை நிரந்தரமாகும். புதிய பொறுப்பு, உழைப்பிற்கேற்ற சம்பளம் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி விலகும். விரும்பிய இட மாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: ஏழாமிட குருவால் சங்கடம் விலகும். குடும்பத்தில் நிலவிய நெருக்கடி நீங்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல்நிலையில் உண்டான பாதிப்பு விலகும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைக்காக தவமிருந்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். புதிய வீடு கட்டுவீர்கள்.
கல்வி : குரு பார்வையால் சிந்தனை சீராகும். செயல் வெற்றியாகும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
உடல்நிலை: மன உளைச்சல், வேலைப்பளு, உறக்கத்தில் குறை, நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள முடியாத நிலை போன்ற பாதிப்பு இனி விலகும். பரம்பரை நோய், தொற்றுநோய் என நீண்ட கால சிகிச்சை எடுத்தவர்கள் இக்காலத்தில் விடுதலை பெறுவர்.
குடும்பம் : சப்தம குருவால் குடும்பத்தில் சங்கடம் விலகும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சிலருக்கு புதிய வீடு அமையும். திருமண வயதினருக்கு மணமேடை ஏறும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட்டு வர முயற்சி வெற்றியாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement