திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் யோகநிலையில் அருள்பாலிக்கும் மூலவர் பைரவருக்கு பல நூற்றாண்டுகளாக ஜெயந்தன் பூஜை நடக்கிறது. சித்திரை முதல் வெள்ளியான நேற்று காலை 9:00 மணிக்கு யாகசலையில் அஷ்டபைரவர் யாகபூஜை துவங்கியது. பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 11:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் பூர்த்தியாகி பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடானது. பின்னர் வேத பாராயணங்கள், திருமுறைகள் முழங்க மூலவர் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பைரவர் விபூதிக் காப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. காலை முதல் பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் யோக பைரவர் திருவீதி உலா வந்தார்.