காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு சாஸ்திரப்படி அஷ்டோத்தர சத சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தட்சிணாமூர்த்தி அபிஷேகத்தில் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று குரு பெயர்ச்சியானார். இதனை முன்னிட்டு சிவன் கோயிலில் வீற்றிருக்கும் மேதா குருதஷிணாமூர்த்திக்கு நேற்று புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை பகல் வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் வம்ச பாரம்பரிய பிரதான அர்ச்சகர் சாமிநாதன் குருக்கள் மற்றும் பிரதான குருக்களான கருணா குருக்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ மேதா குரு தட்சிணாமூர்த்திக்கு சுமார் 2 ஆயிரம் லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், தேங்காய் நீர் மற்றும் இதர வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரதான கலசத்தில் உள்ள நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு தங்க ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தூப தீபங்கள் நிவேதனம் செய்யப்பட்டு, பூர்ண ஆரத்தி செய்யப்பட்டது. பக்தி பரவசத்துடன் நடந்த அபிஷேகத்தை கண்டு, பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த சிறப்பு அபிஷேக பூஜையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு, கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.