மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் திருஞானசம்பந்தர்க்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் பிரமோற்சவம் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருமுலைப்பால் விழா, சகோபுரம், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தெப்போற்ற சவம் ஆகிய விழாக்கள் நடந்து முடிந்தன. விழாவின் நிறைவாக முத்து சட்டைநாதர் சுவாமி உற்சவம் இன்று நடைபெற்றது. 68 ஆம் ஆண்டு சிறப்பு வழிப்பாட்டை முன்னிட்டு முன்னதாக யதாஸ்தானத்திலிருந்து முத்து சட்டநாத சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சுவாமி உள் பிரகாரத்தை வலம் வந்து வசந்த மண்டபம் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மஞ்சள்,திரவிய பொடி, பால், தயிர், இளநீர்,சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 51 வகையான நறுமண பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் 3மணி நேரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆபரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு புனித நீரால் அபிஷேகம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.