பழமையான கோயிலில் சிதிலமடையும் சிலைகள் : கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை



மேலுார்; திருவாதவூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் கோபுரத்தின் சிலைகள் சிதிலமடைவதால் பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் கடந்த 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இக் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகும். கோயிலில் சிவ, கபில, பிரம்ம, வாயு உள்ளிட்ட ஏழு தீர்த்தங்கள் உள்ளது. சிவபெருமான் உமையம்மைக்கு தலச்சிறப்புகளை உணர்த்தும் போது மதுரையம்பதியும், வாதபுரியும் தன் இரு கண்களுக்கு ஒப்பானவை என்று உரைத்தார். மேலும் மகாசேனபாண்டியன் திருமறைநாதருக்கு சாற்றிய கொன்றை மாலை மதுரையம்பதியின் சொக்கலிக்கப் பெருமானிடத்தில் இருப்பதை காட்டி இவ்விரு தலங்களிலும் தான் ஒரே மூர்த்தியாக விளங்குவதை பாண்டியனுக்கு உணர்த்தினார். மதுரையம்பதி சுந்தரேஸ்வர பெருமானே இங்கு திருமறைநாதராகவும், அன்னை மீனாட்சியே வேதநாயகி அம்பாளாக எழுந்தருளியுள்ளனர். மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான் சாபநீக்கம் பெற்றதும், கபிலமுனிவரின் வீரகத்தி தோஷம் நிவர்த்தியானதும், பிருகுமுனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்னிதேவன் முந்தைய நிலைமையை பெற்றதும் இங்குதான் என்பது வரலாறு. முக்கியத்துவம் வாய்ந்த தலம் பராமரிப்பில்லாமல் உள்ளது.

பக்தர் சதீஷ் கூறியதாவது : தொன்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் திருமறைநாதர் மற்றும் வேதநாயகி அம்பாள் கருவறைக்கு மேல் உள்ள கோபுரத்தில் வரலாற்றுகளை விளக்கும் சிலைகள் சிதிலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகிறது. தவிர கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி கருவறை சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்துவிட்டது. அதனால் அறநிலையத்துறையினர் நிதி ஒதுக்கி பழமை மாறாமல் கோயிலை பராமரிக்க வேண்டும் என்றார். கோயில் நிர்வாகிகள் கூறுகையில், " சிலைகள் சிதிலமடைந்தது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்