காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வரும் 20ம் தேதி் அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் உலா வருகிறார். இதில், மூன்றாம் நாள் உற்சவமான மே 22ம் தேதி, கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான மே 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி, கோவில் மேற்கு ராஜகோபுரம் முன்பாகவும், கொடிமரம் அருகிலும், கங்கை கொண்டான் மண்டபம், தேரடி உள்ளிட்ட இடங்களில், விழா பந்தல் அமைக்கும் பணி துவங்க உள்ளதையொட்டி, பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதில், கோவில் கொடிமரம் அருகில் பந்த கால்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.