கருவூர் சித்தருக்கு சாபவிமோசனம் அளித்து காட்சி கொடுத்த நெல்லையப்பர்; மானூரில் பக்தர்கள் பரவசம்



மானுார்; திருநெல்வேலி நெல்லையப்பர் ஆவணி மூலத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்ச்சி மானூர் அம்பலவாணர் கோயிலில்  வெகுவிமர்சையாக நடைபெற்றது.


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத் திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். தனது தவப்பயனால் சிவத் தலங்களில், தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் ஒரு சமயம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன்பாக வந்து, இறைவனை வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர், ‘’ஈசன் இங்கு இல்லை. எருக்கும், குறுக்கும் எழுக’’ என சாபம் இட்டு விட்டு மானுார் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடந்தாங்கி, சித்தரை தடுத்து பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் 


கோயில் என அழைக்கப்படுகிறது. பணிந்து அழைத்த சிவத்தொண்டரிடம் மறுத்துக் கூறிய சித்தர், தொடர்ந்து மானுார் வந்து சேர்கிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் உருமாறி, அகத்தியர், குங்கிலியநாயனார், சண்டிகேஸ்வரர், தாமிரபரணி மற்றும் பாண்டியராஜன் ஆகியோருடன் மானுார் வந்து, அங்குள்ள அம்பலவாணர் கோயிலில் இருந்த சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சியளித்து, சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர். தொடர்ந்து, அங்குள்ள ஆவணி மூல மண்டபத்தில் எழுந்தருளும் இறைவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கின்றன. தொடர்ந்து கருவூர் சித்தரையும் உடனழைத்துக் கொண்டு அனைவரும் நெல்லை வருகின்றனர். மேற்சொன்ன தொண்டர் சன்னதி வந்ததும் சித்தர், ‘’ஈசன் இங்கு உளன், எருக்கும், குறுக்கும் அருக’’என சாப விமோசனம் வழங்குகிறார்.


இந்நிகழ்வுகள், ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில் நடைபெற்றதால், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று, திருவிழாவாக மானுார் அம்பலவாணர் கோயிலில் நடந்து வருகிறது. அன்றைய தினம் மானுார் வந்து வழிபடுபவர்களுக்கு முக்தியும் கிடைக்கும், மூலநோயும் தீரும் என்பது ஐதீகமாகும். இத்திருவிழாவுக்கு காரணமான கருவூர் சித்தருக்கு, மானுார் அம்பலவாணர் கோயிலில் தனி சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தாண்டு, ஆவணி மூலத் திருவிழா நெல்லையப்பர் கோயிலில், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதி உலா நிகழ்வுகளும் நடந்து வந்தது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று முன்தினம் கருவூர் சித்தர், நெல்லை ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானுார் அம்பலவாணர் கோயிலை வந்து அடைந்தார். நேற்று நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் மற்றும் பரிகாரங்களுடன் வீதி உலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு இன்று (12ம் தேதி) அதிகாலை மானுார் வந்தனர். அங்கு காலை 07:00 மணி முதல் 08:00 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சியளித்தார். தொடர்ந்து ஆவணி மூல மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தக்கார் பரமசிவன், செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர்பந்தல் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மானுார் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, ராட்சத ராட்டினங்கள், மிட்டாய் கடைகள், வளையல் மற்றும் பாத்திர கடைகள் என மானூர் விழாக் கோலம் பூண்டுள்ளது.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்