ராமநாதபுரம்; இலங்கை யாழ்ப்பாணம் ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழத்தை ரூ.4.60 லட்சத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பக்தர் ஏலம் எடுத்தார்.
இலங்கை யாழ்பாணம் வண்ணார்பண்ணை தாமரை வீதியில் பண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 நாள் திருவிழா நடந்து வருகிறது. இதில் எட்டாம் நாளில் மாம்பழத்திருவிழா நடந்தது. மாம்பழத்திருவிழா நிறைவில் முருகனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் கோயில் நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டது. இலங்கை மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த பக்தர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ரூ.100ல் இருந்து ஆரம்பித்து 1000, லட்சம் என விலை உயர்ந்து கொண்டே போனது. பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அகிலன் என்ற பக்தர் அந்த மாம்பழத்தை ரூ.4.60 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இக்கோயிலில் ஜூன் 8 ல் தேர்த்திருவிழாவும், 9 ல் தீர்த்த திருவிழாவும், 10 ல் பூங்காவனத்திருவிழாவும், 11 ல் வைரவர் உற்ஸவமும் நடை பெற உள்ளது.