கள்ளக்குறிச்சி: தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட உழவார பணியின்போது, மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சிவலிங்கம் மீட்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு சுவாமி சிலைகள் மீட்கப்பட்ட இடத்திலேயே ஸ்ரீஅபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கியது. கோவிலில் அமிர்தகண்டேஸ்வரர், அபிராமி அம்மாள், விநாயகர், முருகன், நவகிரகங்கள், லட்சுமி ஹயக்கிரிவர், திருப்பதி வெங்கடேஸ்வரர், ராமர் பட்டாபிஷேகம், லட்சுமி, சுப்ரமணியர், சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், வராஹி, ஐய்யப்பன், லட்சுமி நரசிம்மர், பள்ளி அறை, நடராஜர் சபை, அன்னபூரணி, கால பைரவர், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்து, கடந்த செப்., 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டலபூஜை நிறைவு மற்றும் மஹா சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, 108 திருச்சங்கு வழிபாடு, திருத்தாண்டக வேள்வி வழிபாடு, வஸ்திராகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு மூலவர் அமிர்தகண்டேஸ்வரருக்கு சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.