திருவண்ணாமலையில் ‘மஹா தீபம்’ ஏற்றம்; ஜோதியாய் ஜொலித்த ஈசன்.. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்



திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் இன்று மாலை, ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டது. பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.




திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம், 24ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் சுவாமி திருவீதி உலாவும், 7ம் நாள் விழாவில், மஹாரத தேரோட்டமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மஹா தீபத்தையொட்டி, இன்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில்,  10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. 


பரணி தீபம்’ : பின்னர், ‘ஏகன் – அனேகன்’ என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில், நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதை கொண்டு, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு அதிகாலை, 4:00 மணிக்கு, ‘பரணி தீபம்’ ஏற்றப்பட்டது. பின்னர் அதை, சிவாச்சாரியார்கள் கையில் ஏந்திச்சென்று, அம்மன் சன்னதி உட்பட கோவிலிலுள்ள அனைத்து சன்னதிகளிலும், ‘பரணி தீபம்’ ஏற்றினர். இதை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தனித்தனி தங்க விமானத்தில் மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபத்தில் தீபத்தை காணும் வகையில், மலையை நோக்கியவாறு அமர்ந்தனர்.


அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்: பார்வதிதேவிக்கு, சிவபெருமான் தன் இடப்பாகத்தை அளித்தை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய், கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தவாறே மாலை, 5:59 மணிக்கு வெளியே வர, காலையில் ஏற்றப்பட்ட, ‘பரணி தீபம்’ விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு, அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காட்டப்பட்டது.  அதே நேரத்தில், அண்ணாமலையார் மலை உச்சியில், ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, 11 நாட்கள் வரை எரியும், இந்த ‘மஹா தீபம்’ பக்தர்களுக்கு, 40 கி.மீ., வரை தெரியும். ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டதை தொடர்ந்து, இரவு, தங்க ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


500 ‘ஏஐ’ கண்காணிப்பு கேமரா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக நகரில், 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதன் முறையாக, 500 ‘ஏஐ’ கேமராக்கள்,  சாதாரண கண்காணிப்பு கேமராக்கள் – 560 என மொத்தம், 1,060 கேமராக்கள் மற்றும் கோவில் வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட, 360 டிகிரி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை,  திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கன்ட்ரோல் ரூம் மற்றும் கோவில் வளாகத்தில் அமைத்த கன்ட்ரோல் ரூமுடன் இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. 500 ‘ஏஐ’ கேமராக்கள் மூலம், நகரில் எவ்வளவு பக்தர்கள் வருகை தந்துள்ளனர். நகரினுள் எத்தனை வாகனங்கள் வந்துள்ளன, அவற்றின் நம்பர் பிளேட் விபரங்களுடன் சேகரிக்கலாம்.  இந்நிலையில் தீப திருவிழாவையொட்டி,  2,325 பஸ்கள் நிறுத்தும் வகையில், 24 தற்காலிக பஸ் ஸ்டாண்ட், 19,815 கார் நிறுத்தம் வகையில்,  130 கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மஹா தீபத்தை கோவிலினுள் சென்று, 11,500 பக்தர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையில், கோவிலினுள் செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக, நகரின் முக்கிய இடங்கள், கிரிவலப்பாதை என, மொத்தம், 26 இடங்களில், பெரிய திரைகள் வாயிலாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்