திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த, உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றத்தை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான மார்கழி மாதத்தில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ உற்சவம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன்புள்ள, 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழா தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கும், தினமும், காலை மற்றும் இரவில் சுவாமி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.