ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர புஷ்கரணி குளத்தில் நம்பெருமாள் சின்னபெருமாள் என்ற தீர்த்தபேரர் தீர்த்தவாரி கண்டருளினார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தை தொடர்ந்து 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாட்களில், தினமும், நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில், பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து உற்சவத்தின், 10ம் திருநாளான இன்று காலை, 10:15 மணிக்கு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்காக காலை, 9:30 மணிக்கு, மூலஸ்தானத்திலிருந்து, தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய நம்பெருமாள், சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.தொடர்ந்து, அங்கு கூடி இருந்த பக்தர்கள் புனித நீரை தெளித்துக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.