குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடுகின்றனர். பேரகனி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி, பந்துமை உள்ளிட்ட 14 கிராமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள, ஜெகதளாவில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட, ஹெத்தைக்காரர்கள், கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் பூசாரி கும்பம் எடுத்து வர, பூசாரி உட்பட 11 ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் மக்கள் விழுந்து ஆசி பெற்றனர். முக்கிய நிகழ்வாக காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி, வண்ண குடைகளுடன், பாரம்பரிய வெள்ளை உடை அணிந்த மக்கள் படுக நடனமாடியதுடன், பஜனைகளில் ஈடுபட்டனர். அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனர். பல ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 12ம் தேதி மடியரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தை அம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஜெகதளா சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவிலில் இருந்து பக்தியுடன் சேலை நெய்து அம்மனுக்கு சார்த்தப்படும். ஏற்பாடுகளை, ஆறூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.