பந்தலுார்: நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய வயநாடு, கோவில் திருவிழா நிகழ்ச்சியில் மிரண்ட யானை, பாகன்களை தாக்கியது.
கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி பகுதியில் சீதாதேவி கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், இரவு தாலப்பொலி ஊர்வலம், செண்டை மேளத்துடன் நடந்தது. ஊர்வலத்தில் வந்த வளர்ப்பு யானை யுவன் திடீரென மிரண்டு, எதிரில் இருந்தவர்களை தாக்க முயன்றது. அதில், பாகன் சன்னி மற்றும் யானை மீது அமர்ந்திருந்த ராகுல் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த இரண்டு பாகன்களும் ஆனந்தவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். யானையின் இரண்டு கால்களில் சங்கிலி கட்டப்பட்டிருந்ததால், யானை ஓட முடியாமல் அதே பகுதியில் நின்றிருந்தது. தொடர்ந்து, யானை சாந்தப்படுத்தப்பட்டு, அழைத்து செல்லப்பட்டது. இதனால் கோவில் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.