கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.19 லட்சத்தில் புதிய மரக்கதவு திறப்பு



சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் பொருத்தப்பட்ட புதிய மரக்கதவு, இன்று சிறப்பு யாகசாலை பூஜை செய்து திறக்கப்பட்டது.


சேலம் நகரின் மையத்தில் அமைந்துள்ள, எட்டுப்பட்டி மாரியம்மன்களின் முதன்மையாக உள்ள, கோட்டை மாரியம்மன் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உள்ள, பழைய கதவு பழுது ஏற்பட்டு திறந்து மூடுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, புதிய மரக்கதவு செய்யும் பணி உபயதாரர் மூலம் கடந்தாண்டு துவங்கியது. உறுதியான தேக்கு மற்றும் ஈட்டி மரத்தால், 17 அடி உயரம், 8 அடி அகலத்தில் இரு கதவுகளிலும் 78 பூ வேலைப்பாடுகளுடன், 19 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்ட புதிய மரக்கதவு, கிரேன் இயந்திரம் உதவியுடன் எடுத்து வரப்பட்டு, கடந்த மாதம் பொருத்தப்பட்டது. இதன் திறப்பு விழா, அட்சய திருதியையான இன்று திறக்கப்பட்டு, அம்மன் பிரவேசம் நடந்தது. இதனையொட்டி இன்று காலை, 5:00 முதல் 7:00 மணி வரை சிறப்பு யாகபூஜை மகா பூர்ணாஹூதியுடன் நடத்தப்பட்டது. அதில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை, புதிய கதவுக்கு தெளித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், ‘ஓம்சக்தி பராசக்தி’ என கோஷம் முழங்க கதவு திறக்கப்பட்டு, முதலில் கோமாதாவும், அதை தொடர்ந்து தங்க கவசத்தில் எழுந்தருளிய உற்சவர் அம்மன் பிரவேசமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. பின்னர், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்