சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், நேற்று நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி, நடராஜருக்கு ஆண்டுக்கு, ஆறு முறை மகாபிஷேகம் நடக்கிறது. இதில், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசன காலங்களில் மட்டும் அதிகாலையில், ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், மற்ற நான்கு மாதங்களில் மாலை வேளையில், சித்சபையின் முன்பு கனசபையிலும் மகாபிஷேகம் நடக்கிறது.
அந்த வகையில் சித்திரை மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று காலை நடராஜருக்கு ஏககால லட்சார்ச்சனையும், யாகசாலையில் கடஸ்தாபனம், மகா ருத்ர பாராயணம் தொடங்கி மாலை வரை நடந்தது.
மாலை மகா ருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகா ருத்ர பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தன. தொடர்ந்து வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி, கோ, அஸ்வ, கஜ பூஜைகள், மஹா பூர்ணாஹுதி, மகா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்து, சித்சபை முன் கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலர் ஜெயசூர்யா தீட்சிதர், துணை செயலர் கணபதி சுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.