திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அத்துமீறும் வியாபாரிகள்: பக்தர்கள் தவிப்பு



திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தெற்கு நுழைவாயிலில் அருகே, வியாபாரிகள் அத்துமீறி வைக்கப்படும் தற்காலிக கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தவிர கந்தசஷ்டி, மாசி மாத பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.

விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக வடக்கு குளக்கரை பகுதி உள்ளது. பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்கள், குளக்கரைக்குள் வந்து தெற்கு நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் செல்வர்.

கடந்த 2023ல் மேற்கண்ட வழியில் அனுமதியின்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளால், இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அதன் பின் தற்காலிக கடை நடத்தும் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பரணி, கிருத்திகை, விசேஷ நாட்களில் மட்டும் கடைகள் வைக்க அப்போதைய அமைச்சரிடம் அனுமதி கோரினர். இதற்கு, பரணி, கிருத்திகை நாட்களில் மட்டும் தற்காலிக கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அனைத்து விசேஷ நாட்களிலும் அனுமதியின்றி கடை அமைக்கப்படுகிறது.

குறிப்பாக கந்தசுவாமி கோவிலின் தெற்கு நுழைவாயிலில், வடக்கு மற்றும் கிழக்கு குளக்கரை சந்திப்பு பகுதியில் வியாபாரிகள் அத்துமீறி கடைகள் வைத்துள்ளனர். இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதே பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் தங்களது காலணிகளை விடுவதற்கு, தனி கட்டடம் அமைக்கப்பட்டது. தற்போது அவற்றையும் மறைத்து, வியாபாரிகள் அத்துமீறுவதாகக் கூறப்படுகிறது.எனவே, பக்தர்களுக்கு இடையூறாக அனுமதியின்றி அமைக்கப்படும் தற்காலிக கடைகளை கோவில் நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்