திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளத்தின் (திருக்குளம்) கிழக்கு பகுதியில் ஓம்முருகா என்ற எழுத்துக்களுடன் வைக்கப்பட்டுள்ள நவீன போர்டை மலை உச்சியில் அமைக்க வேண்டும் என குன்றத்து பூர்வ குடியினர், முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் கோரிக்கையை வைத்துள்ளனர்.
லட்சுமி தீர்த்த குளத்தில் முன்பு எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். மழை பெய்யும் பொழுது குளத்தின் அருகில் உள்ள மலையின் பாறைகளில் மழை நீர் விழுந்து குளத்திற்குள் வரும். தவிர ஜி.எஸ்.டி. ரோட்டின் அருகே உள்ள தெப்பக்குளம் நிறைந்து உபரி நீர் பூமிக்குள் அமைக்கப்பட்டிருந்த பாதையின் வழியாக திருக்குளத்திற்கு வரும். அந்தப் பாதை தற்போது முழுமையாக நடைபெற்று விட்டது. மழை பெய்தால் மட்டுமே திருக்குளத்திற்கு தண்ணீர்வரும். தண்ணீர் நிரம்பி இருந்த காலங்களில் ஏராளமான மீன்கள் இருந்தன. இந்த மீன்களுக்கு உப்பு, மிளகு, பொறி போட்டால் மனிதர்கள் உடலில் உள்ள மரு, தேமல் உள்ளிட்ட தோல் நோய்கள் மறையும்என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட்டு அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின்பு மூலஸ்தானம் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அத்திருக்குளம் சேதமடைந்தது. கோயில் சார்பில் ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்கள் கொண்டு சீரமைப்பு பணிகளும், வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கல்கள் பதித்து சீரமைக்கப்பட்டது.
5 மாதங்களுக்கு முன்பு மலை மேல் ஓம் முருகா என்ற எழுத்துக்களுடன் நவீன டிஜிட்டல் போர்டு உபயோகாரர் மூலம் அமைக்க முடியும் முடிவு செய்யப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை பம் ஏற்றுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததால் மலை மேல் ஓம் முருகா போர்டை அமைக்க போலீசார் தடை விதித்தனர். அதனால் அந்த ஓம் முருகா போர்டு திருக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் ஒளிர்கிறது. திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் அங்கு செல்வதில்லை. அந்த ஓம் முருகா போர்டு மூலையில் யார் கண்ணிலும் படாமல் உள்ளது. என்ன நோக்கத்திற்காக அந்த ஓம் முருகா போர்ட் தயாரித்து வைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அந்த ஓம் முருகா போர்டை மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரம் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வைத்தால் அனைவரும் பார்க்க முடியும். பக்தர்கள் அந்த போர்டை தினமும் தரிசிக்க முடியும். அதனால் கோயில் நிர்வாகம் குளத்தில் பயனற்று கிடக்கும் ஓம் முருகா போர்டை மலை உச்சியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.