ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் குடைவரை கோயில் போல கடற்கரை பாறைகளால் கட்டப்பட்ட மங்களநாதர் கோயில் வளாகத்தில் உள்ள உமா மகேஸ்வரர் சன்னதியை பல்கலை தொல்லியல் மாணவர்கள் பார்வையிட்டு அதிசயித்தனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு களப்பயணம் வந்தனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு வழிகாட்டினார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பழைய கற்காலம் முதல் தற்காலம் வரை தொல்லியல் சான்றுகளை அதிகம் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரியதும் அதிக வாழ்நாளைக் கொண்டதுமான பொந்தன்புளி மரங்களை இங்கு அதிகமாக காண முடியும். கீழைப் பழங்கற்கால தடயங்கள், முத்திரைக்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைகை நதியை அடிப்படையாக வைத்து சங்கிலித் தொடர் கண்மாய்களை சேதுபதி மன்னர்கள் பராமரித்து மேம்படுத்தினர். அகழாய்வு மூலம் பெரியபட்டினத்தில் சங்ககால சேரர், பாண்டியர் கால காசுகளும், அழகன்குளத்தில் ரோமானியர், சங்ககால பாண்டியர் காசும் கிடைத்துள்ளன.
கோயில்கள்: ராமேஸ்வரம், திருவாடானை இலக்கியச் சான்று அடிப்படையில் கி.பி.,7-ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. கருவறையைச் சுற்றிவர அமைக்கப்படும் சுற்றுப்பாதையை சாந்தாரம் என்பர். தஞ்சாவூர் கங்கை கொண்ட சோழபுர கோயிலில் இந்த அமைப்பு உள்ளது. ராமேஸ்வரத்தில் 3 கோயில்கள், சாயல்குடி, உத்தரகோசமங்கை கோயில்களில் இந்த அமைப்பு உள்ளது. விமானம் ஒரே ஒரு தளத்துடன் அமைந்தது மாரியூர் கோயில். திருப்புல்லாணி கோயிலில் அதிக கல்வெட்டுகள் உள்ளன. கோயில்கள் பெரும்பாலும் கடற்கரைப் பாறைக் கற்களைக் கொண்டு கலைநயத்துடன் குடைவரை கோயில்கள் போல கட்டப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் துறைமுக நகரமாக உள்ள ஊர்களிலும், வணிகப் பெருவழிகளில் பல சாலைகள் சந்திக்கும் ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. உயரமான அடித்தளத்துடன் மாடி போன்ற அமைப்பில் கட்டப்பட்டவை மாடக் கோயில்கள் எனப்படும். முற்காலப் பாண்டியர்களால் 8-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஒரேயொரு மாடக்கோயில் உத்தரகோசமங்கை உமா மகேஸ்வரர் சன்னதி. இங்கு உமா மகேஸ்வரராக சிவன், பார்வதி அமர்ந்த நிலையில் உள்ளனர் என்றார். கடற்கரைப் பாறைகளில் குடைவரைக் கோயில் போலக் கட்டப்பட்டுள்ள உமா மகேஸ்வரர் சன்னதியின் கட்டடக்கலைச் சிறப்பை மாணவர்கள் பார்வையிட்டனர். பேராசிரியர்கள் முருகன், சந்தியா, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன ஆய்வாளர் வே.சிவரஞ்சனி பங்கேற்றனர்.