பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து, அம்மனை தரிசித்தனர்.
சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்க கவச அலங்காரத்தில், ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.
மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், அழகு நாச்சியம்மன் கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தர்ப்பணம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றங்கரையில் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலைகளில் எள், அரிசி மாவுப்பிண்டம், வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதுபோன்று ஆனைமலை, ஆழியாறு, பாலாறு உள்ளிட்ட ஆற்றங்கரைகளில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு ஆடி அமாவாசை நாளான இன்று காலை, 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷக பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர். நடுமலை எஸ்டேட் துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்கோவில், சிறுவர்பூங்கா பராசக்தியம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.