பாலக்காடு: கிருஷ்ணா ஜெயந்தியையொட்டி பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் சந்நிதியில் பிரபல கதகளி ஆசார்யன் கலாமண்டலம் கோபி ஆசான், குசேலனாக வேடமிட்டு ஆடி பக்தர்களையும் ரசிகர்களையும் பரவசப்படுத்தினார். நிகழ்வின் நிறைவில் குருவாயூர் தேவஸ்ம் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
நேற்று இரவு கோவில் வளாக மேல்புத்தூர் ஆடிட்டோரியத்தில் குசேலவிருத்தம் கதகளி நிகழ்ச்சி அரங்கேறியது. குருவாயூர் சந்நிதியில் பலமுறை கிருஷ்ணனாக வேடமிட்டுத் தோன்றி முத்திரை பதித்த கோபி ஆசான், இம்முறை குசேலனாக வேடமேற்றதைக் காண அரங்கம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இக்களத்தில் கிருஷ்ணனாகக் கலாமண்டலம் கிருஷ்ணகுமாரும், ருக்மிணியாகச் சம்பக்குளம் விஜயகுமாரும் நடித்தனர். இந்நாடக அரங்கை இரிஞ்ஞாலக்குடா பார்வதி கலா கேந்திரம் ஒருங்கிணைத்திருந்தது. கதகளி நிறைவடைந்ததும் நடைபெற்ற பாராட்டு விழாவில், தேவஸ்ம் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு ஆகியோர் இணைந்து கலாமண்டலம் கோபி ஆசானுக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மேலும், குருவாயூரப்பனின் திருவுருவப் படமும் பாரம்பரியக் குத்துவிளக்கும் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேவஸ்ம் நிர்வாக அதிகாரி ஹரிகோபால், பதிப்பு மேலாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டனர்.