அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை



புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்  2019, நவ.,9ல் வழங்கியது.

பல நூற்றாண்டுகள் கடந்து பாதை;

* 1528: அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. இது ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக சர்ச்சை.

* 1853: அயோத்தி யாருக்கு சொந்தம் என்பதில் வன்முறை. 75 பேர் பலி.

* 1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. உட்பகுதியில் முஸ்லிம்கள், வெளிப்பகுதியில் ஹிந்துக்கள் வழிபட வகை செய்யப்பட்டது. இருபுறம் சுவர் எழுப்பி, மோதல் தவிர்க்கப்பட்டது.

* 1949: மசூதியில் ராமர் சிலை தென்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு அரசு பூட்டுப் போட்டது. அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் என அறிவிக்கப்பட்டது.

* 1950: அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது என பைசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிங் விஷாரத் வழக்கு தொடர்ந்தார். இது சுதந்திரத்துக்குப் பின் அயோத்தி தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்ற முதல் வழக்கு.

* 1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில், நிர்மோகி அகாரா வழக்கு தொடுத்தது.

* 1961: பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி பைசாபாத் நீதிமன்றத்தில் சன்னி மத்திய வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

* 1986: பூட்டப்பட்ட மசூதியின் உள்ளே சென்று ஹிந்துக்கள் வழிபடலாம் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். முஸ்லிம்கள் போராட்டம் வெடித்தது.

* 1989: சர்ச்சைக்குரிய இடம் முழுமையாக கோயில் என அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பைசாபாத் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும், மூன்று நீதிபதிகள் உடைய அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டன.

* 1991: 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம்; எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

* டிச., 6, 1992: பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கலவரத்தில் 2,000 பேர் பலியாகினர்

* மார்ச் 2002: அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரயிலுக்கு, குஜராத்தின் கோத்ராவில் தீ வைக்கப்பட்டது. இதில் 58 பேர் பலியாகினர். தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* ஏப்., 2002: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, விசாரணையை துவக்கியது.

* ஆக., 2003: மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான சான்று இருப்பதாக தொல்லியல் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்தது.

* செப்., 2003: பாபர் மசூதி இடிப்பில் ஏழு ஹிந்து தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்தது.

* ஜூலை 2005: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில் வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

* ஜூலை 2009: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பின் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

* செப்., 2010: 2.77 ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி ராம் லால்லா அமைப்புக்கும், மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கும், மூன்றாவது பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் பிரிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு பின் பணி தொடங்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* மே, 2011: அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மூன்று தரப்பினர் உள்ளிட்ட 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

* பிப்., 2016: வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு.

* மார்ச் 21, 2017: இப்பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படுத்தலாமா என, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி கெஹர், யோசனை தெரிவித்தார்.

* பிப்., 8, 2018: வழக்கு தொடர்பான தனிநபர் மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

* மார்ச் 14: சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* செப்., 27: மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை என, 1994ல் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* ஜன., 8, 2019: வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா, யு.யு.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

* ஜன., 10: அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.

* ஜன., 25: ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டது.

* மார்ச் 8: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில் சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

* ஆக., 1: சமரச பேச்சுவார்த்தை நடத்திய குழு இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

* ஆக., 2: சமரச குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

* ஆக., 6: உச்சநீதிமன்ற அமர்வு வழக்கை தினந்தோறும் விசாரிக்க துவங்கியது.

* அக்., 16: விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு ஒத்திவைப்பு.

நவ., 9: 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு மூன்று மாதத்துக்குள் அமைப்பை உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

2020ம் ஆண்டு ஆகஸ்டு 5; ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அமைப்பின் மூலமாக 2.77 ஏக்கர் இடத்திலும் அதைச்சுற்றியுள்ள ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்திலும் சேர்த்து பிரம்மாண்டமான ராமர் ஆலயம் அமைக்க 2020ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி சுப போக சுப வேளையில் பாரத பிரதமர் மோடி அவர்களால் ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ராமன் அருளால் இனிதே நடைபெற்றது.

500 ஆண்டு கனவு நனவானது:

உ.பி.,யின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு, ‛ ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 2020ம் ஆண்டு ஆக., 5ம் தேதி நடந்தது . 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார். பூமி பூஜைக்காக 2 ஆயிரம் கோயில்களில் இருந்து புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

உலகமே எதிர்பாக்கும் ஜன.22;

உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் ஆவலுடன் எதி்ர்பார்த்துக் கொண்டு இருக்கும் அயோத்தி ராமர் ஜென்பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் வரும் 22-ல் திறக்கப்பட உள்ளது. ராமாயணத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான தேதி குறிக்கப்பட்டதும், அயோத்தி நகரமே தேவலோகம் போல் ஜொலித்து, திருவிழா கோலம் பூண்டதாக படித்திருப்போம். ராமர் கோவிலுக்கான கும்பாபிஷேக தேதி குறிக்கப்பட்டதிலிருந்து, அயோத்தி நகரம் இப்போதும் அப்படித் தான் காட்சியளிக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்