ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா



ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா  நேற்றும், இன்றும்  நடைபெற்றது.

108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா  நேற்று தொடங்கி  இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று  முதல் புறப்பாடாக, உற்சவர் நம்பெருமாள்  மூலஸ்தானத்திலிருந்து  காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு  சந்தனு மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் சந்தனுமண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பிக்கப்பட்டது. இரவு 11.30 மணி முதல் இன்று  அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் (பக்திக்கு குலம் தடை இல்லை என்பதை உணர்த்துதல்) எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பட்டர் படித்தார். கைசிக புராணத்தை படித்தாலோ அல்லது கேட்டாலோ நற்பயன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்