விழுப்புரம்; சுமார் 900 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமத்தில், பழமை வாய்ந்த எமதண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மண்ணுக்குள் புதைந்திருந்த 3 துண்டு கல்வெட்டுகள், தற்போது வெளியே எடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: எமதண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டில், விக்கிரம சோழனைக் குறிப்பிடும் மெய்க்கீர்த்தி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் சித்தலிங்கமடம், பிரம்மதேசம், திருவாமாத்துார் உள்ளிட்ட இடங்களில் 1,120ம் ஆண்டுமுதல் 1,133ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில், விக்கிரம சோழனின் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளன. இதே காலத்தில், 900 ஆண்டுகளுக்கு முன், ஆலகிராமம் பகுதியிலும், திருப்பணிகள் நடைபெற்றிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.