திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
உப கோயில்களின் கும்பாபிஷேக திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம்,பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா சொந்த செலவில் செய்தனர். சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில்: ஏப் 14ல் துவங்கிய யாகசாலை பூஜை இன்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட மூலவர்களின் சக்தி கலை இறக்கப்பட்ட புனித நீர் குடங்கள் மூலவர்கள் முன்பு கொண்டு செல்லப்பட்டு. மூலவருக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. முதலில் சொக்கநாதர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு பழனியாண்டவர் கோயிலில் யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்: இக்கோயில்களில் விமானங்கள் இல்லாததால் ஏப்.15ல் துவங்கிய யாகசாலை பூஜை நேற்று பூர்த்தி செய்யது, மூலவர்களுக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் முறை கும்பாபிஷேகம்: அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில் உருவாக்கப்பட்டு 600 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இங்கு முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என கோயில் பூஜாரிகள் தெரிவித்தனர். மாம்பலம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பின்பு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. அறங்காவலர் குழுவினர், கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.