ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை 5 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு கவர்னர் ரவி வந்தார். இவருக்கு கோயில் குருக்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின் கோயிலில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் கவர்னர் ரவி, மனைவி லட்சுமி, உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை கவர்னர் ரவி மற்றும் குடும்பத்தினர் தீர்த்தங்களை தலையில் தெளித்துக் கொண்டு புனித நீராடினர். இதன்பின் துவங்கிய கால பூஜையில் மீண்டும் கோயிலுக்கு வந்த கவர்னர் ரவி, குடும்பத்தினர் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதன்பின் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்ற கவர்னர் ரவி இலங்கைக்கு ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தை நோக்கி சுவாமி தரிசனம் செய்தார். பின் அங்கிருந்து காரில் ராமேஸ்வரம் தங்கும் விடுதிக்கு வந்தார். பின் காலை 11:10 மணிக்கு காரில் மதுரை சென்றார்.