திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7ம் தேதி காலையில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைப்பது, பக்தர்களுக்காக கடற்கரையில் தடுப்பு அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7ம்தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி பெருந்திட்ட வளாக பணிகளும், பல்வேறு திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்திற்காக முன்னேற்பாட்டுப் பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கனிமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். வரும் 1ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி, 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.